ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

Su.tha Arivalagan
Jan 08, 2026,06:03 PM IST
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள சூழலில், அதற்குத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் அளிக்க மறுப்பதாக எழுந்துள்ள விவகாரம், தற்போது தமிழக அரசியல் மற்றும் திரைத்துரையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஜனநாயகன் படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் போர்டு சான்று வழங்குவது தாமதாவதால் அதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படக்குழு அவசர வழக்க தாக்கல் செய்தது.இதிலாவது முடிவு கிடைக்கும், திட்டமிட்டபடி ஜனவரி 09ல் படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று பார்த்தால் வழக்கின் தீர்ப்பே ஜனவரி 09ம் தேதி தான் சொல்லப்பட உள்ளதாக கோர்ட் தெரிவித்து விட்டது. இதனால் ஜனவரி 09ம் தேதியன்று காலை 9 மணி காட்சிகள் வெளியாக வாய்ப்பு இல்லை.



ஜனவரி 09ம் தேதி காலை 10.30 மணிக்கு கோர்ட் வேலை நேரம் துவங்கினாலும், ஜனநாயகன் வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறதோ அதற்கு பிறகு தான் தீர்ப்பு வெளியாகும். இதனால் எப்படி பார்த்தாலும் ஜனவரி 09ம் தேதி படம் ரிலீசாகாது. ஒருவேளை கோர்ட், சாதகமாக தீர்ப்பு வழங்கினால் ஜனவரி 10 அல்லது அதற்கு பிறகு படம் ரிலீசாகும். ஒருவேளை தீர்ப்பு எதிராக வந்தால், ஜனநாயகன் ரிலீசாக இன்னும் சில வாரங்கள் கூட ஆகலாம்.அதனால் தற்போது வரை ஜனநாயகன் எப்போது ரிலீஸ் என உறுதியாக தெரியாத நிலையே உள்ளது.

இந்நிலையில் ஜனநாயகன் பட விவகாரத்திற்கு விஜய்க்கு ஆதரவாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பேட்டியாகவும், சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சிலர் அரசியல் ரீதியாகவும், சிலர் விஜயின் ரசிகர்களில் ஒருவராகவும் இருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களின் கருத்து :

காங்கிரஸ் எம்பி., ஜோதிமணி - தணிக்கை வாரியம் என்பது ஒரு காலாவதியான அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையைத் தொடர்ந்து, தற்போது தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது. இது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் மீது நடத்தப்படும் தாக்குதல். இத்தகைய தணிக்கை முறை கலைக்கப்பட வேண்டிய ஒன்று.

டைரக்டர் வெங்கட் பிரபு -  "எது எப்படியானாலும் சரி... இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய FAREWELL (பிரியாவிடை) படமாக இருக்கும்".

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) - "அண்ணா... ஒரு தம்பியாக கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன். உங்களுக்கு என்று ஒரு தேதியோ நேரமோ தேவையில்லை, நீங்கள் வரும் போதுதான் திருவிழா தொடங்கும். ஜனநாயகம் எப்போது வந்தாலும், அப்போதுதான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பிக்கும்" 

டைரக்டர் அமீர் - " ஒரு சினிமாவ வர விடாம தடுத்துட்டா அவங்கள தன் வழிக்கு கொண்டு வரலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேவலமானது".