மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
Nov 28, 2025,04:52 PM IST
சென்னை: மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும், என்றும் அதிமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இவருக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் என்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தவெகவில் இணைய உள்ளதாக ஒரு கருத்து பரவி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
50 ஆண்டுகளாக அரசியல் அனுபவம் உள்ளவர் அண்ணன் செங்கோட்டையன். நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தான் சொல்வேன். இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரை தொடர்ந்து நானும் தவெகவிற்கு செல்லப்போவதாக கருத்துக்கள் பரவி வருகின்றன. ஜெக்குமாரை பொருத்த வரை ஒரே கட்சி தான். அது அதிமுக தான். என்னுடைய இறுதிக் காலம் வரை அதிமுக தான். அன்றும், இன்றும், என்றும் அதிமுக தான்.
புலிக்கு வாலாக இருப்பேனே தவிர, எலிக்கு தலையாக இருக்க மாட்டேன். புலிக்கு வாலாக இருக்க தான் நான் விரும்புகிறேன். அது தான் எனக்கு பெருமை. சிரிப்புதான் வருது எனக்கு. நான் தவெகவிற்கு போவேன் என்பது நடக்காது கண்ணா நடக்காது. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இப்பது தான் எனக்கு பெருமை. சிரிப்புதான் வருது எனக்கு.. இது நடக்காது கண்ணா நடக்காது. யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.
அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.