JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தலில் தவெக சார்பில் மூத்த அரசியல் தலைவரான ஜேசிடி பிரபாகர் ஒருமனதாக அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதேபோல துணை சபாநாயகராக தவெகவின் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.
எம்.ஜி.ஆர். காலத்து அரசியலவாதியான ஜேசிடி பிரபாகர், நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அதிமுகவில் மட்டுமே செயல்பட்டு வந்த அவர் பின்னர் தவெகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
புதிய தவெக அமைச்சரவையில் அவர் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தற்போது அவருக்கு சபாநாயகர் பொறுப்பை அளிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளார் ஜேசிடி பிரபாகர். முதல்வர் சி ஜோசப் விஜய் முன்னிலையில் அவரது விண்ணப்பப் படிவம் தற்காலிக சபாநாயகரிடம் அளிக்கப்பட்டது.
ஜே.சி.டி. பிரபாகர் அனுபவம் வாய்ந்த தமிழக அரசியல்வாதி மற்றும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்கிறார். தமிழக அரசியலில் ஒரு நிதானமான மற்றும் முதிர்ச்சியான முகமாக அறியப்படுபவர் ஜே.சி.டி. பிரபாகர். திண்டுக்கல்லில் பிறந்த இவர், தனது அரசியல் வாழ்வை அதிமுகவின் தொடக்க காலத்திலேயே எம்.ஜி.ஆர் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார்.
1980-களில் அரசியலில் கால்பதித்த இவருக்கு, எம்.ஜி.ஆர் அவர்கள் 1980 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தனது முதல் சட்டமன்றப் பயணத்தைத் தொடங்கினார்.
வில்லிவாக்கம் தொகுதி பிரபாகருக்கு ஒரு கோட்டையாக அமைந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது இவரது அரசியல் வாழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மாற்றங்களுக்குப் பிறகு, இவர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் சில காலம் செயல்பட்டார். இருப்பினும், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை முன்னெடுக்க விரும்பிய இவர், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜே.சி.டி. பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் 58,965 வாக்குகள் பெற்று, சுமார் 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
தவெக கட்சியின் கொள்கை உருவாக்கம் மற்றும் மூத்த அரசியல் ஆலோசகராக இவர் தற்போது முக்கியப் பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் சபாநாயகராக இவர் தேர்வு செய்யப்படுவதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் தொடங்கவுள்ளார்.
பிரபாகர் மிகவும் மென்மையான போக்கு கொண்டவர். எப்போதுமே மற்ற அரசியல் தலைவர்களிடம் கண்ணியத்துடனும், நாகரிகத்துடனும் பழகக்கூடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூக முன்னேற்றம் மற்றும் கல்வி சார்ந்த விவாதங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.
சபாநாயகர் பதவிக்கென்று ஒரு மாண்பு உள்ளது. அந்தப் பதவி ஜேசிடி பிரபாகருக்கு மிக மிக பொருத்தமாக என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த பிடிஆர் பழனிவேல்ராஜன் போல அந்தப் பதவிக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் பிரபாகர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.