சிலுவை நாயகனின் ஏழு வார்த்தைகள்!
- டாக்டர் கோ. லதா
அறியாமல் செய்த பாவம் போக்க
அன்பே இவர்களை மன்னியும் என்றார்
சிலுவை மரம் சிங்காசனம் ஆனது
ஜீவன் தந்து எம்மை மீட்டார்
அருகில் அழுத கள்வன் நோக்க
இன்றே பரதீசில் இருப்பாய் என்றார்
மரண பயம் நீக்கி அருளினார்
மன்னவன் வாக்கு மாறா உண்மையே
அன்னை மரியாளின் துயரம் கண்டார்
அம்மா இதோ உன் மகன்
பாசத்தின் பிணைப்பை அங்கே தந்தார்
பாரினில் உறவின் மேன்மை சொன்னார்
உலகப் பாவங்கள் தோளில் சுமக்க
என்னை ஏன் கைவிட்டீர் என்றார்
தந்தை இறைவனைத் தேடித் துடித்தார்
தனிமையின் வலியை தாமே ஏற்றார்
தர்மம் காக்க தன்னுயிர் ஈய
தாகம் என்றே உருக்கமாய் சொன்னார்.
ஆன்மத் தாகம் அவரில் கண்டோம்.
அருட்கடல் அவரே தாகம் கொண்டார்
எல்லாம் முடிந்தது என்றே முழங்கினார்
மீட்பின் பணியை முழுமை செய்தார்
உம்மிடம் ஆவியை ஒப்படைக்கிறேன் என
உன்னத பிதாவின் மடி சேர்ந்தார்.
கல்வாரி மலையின் உச்சியிலே
கறையற்ற ஆட்டுக்குட்டி தொங்குகிறார்
பாவ பாரம் சுமந்தே
பாசத்தோடே நம்மை அழைக்கிறார்.
ஆணி பாய்ந்த கரங்களிலே
அனந்த ஆசீர்வாதம் கொட்டுகிறார்
முள்முடி தரித்த சிரசிலே
முடிவில்லா கிருபை அருளுகிறார்
சிலுவை அது அன்பின் அடையாளம்
சிதைந்த உள்ளத்திற்கு ஆறுதல் தலம்
நிழல் தரும் கிருபையின் சோலை
நிம்மதி அருளும் ஆசீர்வாதம்
வழி தவறி நின்ற எனக்கு
வழிகாட்டி நீ தானே சிலுவையே
பாவம் போக்கும் வல்லமை
புது உயிர் தரும் புனிதமே
என் குறைகள் மறைய
உன் நிழலில் ஒதுங்கினேன்
என் பாரங்கள் நீங்க
உன் பாதம் பணிந்தேன்
சிலுவையின் ஆசீர்வாதம் நிலைக்கும்
என்றும் காக்கும் கிருபையை...!
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)