ஜூன் 15.. தந்தையர் தினம்.. அப்பாக்களைப் போற்றுவோம்.. அரவணைப்போம்!
- ஸ்வர்ணலட்சுமி
Father's day.. தந்தையர் தினம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேராக திகழும் தந்தையை கவுரவிக்கும் ஒரு உன்னதமான நாள். ஜூன் 15ஆம் தேதி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை "தந்தையர் தினம்" அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு தந்தையின் உழைப்பு ,அர்ப்பணிப்பு அவரது சமூக செல்வாக்கை அங்கீகரிக்கும் ஒரு விழாவாக இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பத்து மாதம் குழந்தையை கருவில் சுமப்பது தாய். ஆனால் ஒவ்வொரு குழந்தையையும் வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும், தோளிலும் அவர்களின் வாழ்க்கைக்காகவும், வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தன் உழைப்பாலும், வருமானத்தினாலும் பக்க பலமாக அக்குழந்தையின் வளர்ச்சி என்கிற படிகளுக்கு ஏணியாக விளங்குபவர் தந்தை.
தந்தையர் தினம் வரலாறு:
அமெரிக்காவில் 1900 களில் முற்பகுதிகளில் தந்தையர் தினத்தை கொண்டாடும் எண்ணம் தோன்றியது. 1908 இல் மேற்கு விர்ஜீனியாவில் ஒரு தேவாலய சேவையை நடத்திய கிரேஸ் கோல்டன் கிளேட்டன் சுரங்கப் பேரழிவில் இறந்த தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் தந்தையர் தினத்தை கொண்டாடும் யோசனையை முன் வைத்தார்.
1910 இல் சோனோரா ஸ்மார்ட் டாட் என்பவரால் அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் "தந்தையர் தினம்" அனுஷ்டிக்கப்பட்டது. அவர் தன் தந்தையை கௌரவிப்பதற்காக தந்தையின் பங்கையும் அவர் சமூகத்தில் செய்த சேவையையும் அங்கீகரிக்கவும் ஒரு நாளை தொடங்கினார். 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
திருவள்ளுவர் திருக்குறளில் தந்தையை பற்றி மக்கட் பேறு என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் யாதெனில்,
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
இதன் பொருள் தந்தை தன் மகனுக்கு செய்யும் நன்றி அவனை கற்றோர் அவையில் முந்திக் கொள்ளும்படி கல்வி அறிவு பெற்று நல்லொழுக்கத்துடன் இருக்கும்படி செய்தல் ஆகும் .அதற்கு மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி பற்றிய திருக்குறள் யாதெனில்,
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்"
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைமாறு பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர் இப் பிள்ளையை பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ !...என்று சொல்லும் சொல்லாகும். தந்தை மகன் உறவில் அன்பு ,பாசம் ,ஆதரவு ஆகியவை மிக முக்கியம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.
சிறப்புக்கள் :தந்தையர் அவர்களது குடும்பத்தில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒரு வாய்ப்பு இந்த தந்தையர் தினம் .இது தந்தையர் மற்றும் குடும்பத்தில் தந்தையின் பங்கு தந்தை வழிப் பிணைப்பு ஆகியவற்றை கௌரவிப்பதற்கான சிறந்த நாள் .
தந்தையர் தினம் எவ்வாறு கொண்டாடலாம்...
தந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள் . அவருக்கு பிடித்த புத்தகங்கள் ,பரிசு பொருட்கள் ,ஆடைகள் வாங்கித் தருவது, அவருக்கு தனித்துவமான பரிசுகளையும் வாங்கிக் கொடுங்கள் . அவரது பணியை போற்றவும், அவரை புகழ்ந்து பேசவும், மதிக்கவும், ஒரு நல்ல வாய்ப்பு இந்த தந்தையர் தினம்.
தந்தை இருப்பவர்கள் தந்தையர் தினத்தன்று தவறாமல் ஏதேனும் ஒரு நன்மையை உங்கள் தந்தைக்கு செய்யுங்கள். ஏனெனில் ,"அப்பா" என்கிற சொல்லே உன்னதம். "அப்பா" ஒரு அற்புதம். "அப்பா "ஒரு கவிதை.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே .. தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை ...தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ..."
தந்தையர் தினத்தன்று நாம் அனைவரும் தந்தையை போற்றி மகிழ்வோம் .தந்தை இருப்பவர்கள் போற்றிப் பாராட்ட மறவாதீர்கள்... தந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள்... மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.