மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டில்லி சென்று தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தேன் என தெரிவித்துள்ளார். இது அதிமுக, பாஜக.,வில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
செப்டம்பர் 05ம் தேதியன்று மனம் திறக்க போவதாக சொல்லி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக.,வில் இருந்து விலகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் பேசியதற்காக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 09ம் தேதி மீண்டும் மனம் திறக்க போவதாக தெரிவித்திருந்த செங்கோட்டையன் மன அமைதிக்காக ஹரித்வார் செல்ல உள்ளதாக கூறி இருந்தார். இன்று சென்னை திரும்பிய அவர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஹரித்வார் செல்வதற்காக டில்லி சென்ற போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அவர் நேரம் ஒதுக்கியதை அடுத்து டில்லி சென்று அவரை சந்தித்தேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதிமுக மீண்டும் பலம் பெற வேண்டும் என்பதற்காக அவரை சந்தித்து ஆலோசித்தேன். நிதி மற்றும் ரயில்வே அமைச்சர்களை சந்தித்து தமிழக நலன் குறித்து ஆலோசனை நடத்தினேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.