செவிலியர் சிறப்பு!

Su.tha Arivalagan
Oct 18, 2025,05:17 PM IST

- கா.சா.ஷர்மிளா


பிணிக்கு மத்தியில் உந்தன் பணி....!

முகம் கோணாமல்  முழு மனதுடன்  செய்யும் பணி...!

மலர்ந்த பூங்கொத்தாய்..

புன்னகை மாறா முனைப்புடனே செய்யும் பணி...!

வாடும் முகங்களுக்கு புத்தொளி வழங்கி 

புண்பட்ட உள்ளத்திற்கு மருந்தாக  நிற்கும் பணி உந்தன் பணி...!


தாயைப்போல் அன்பு செலுத்தும் பணி...!

தந்தையைப் போல் கண்டிப்பு

காட்டும் பணி...!

முன் பின் தெரியாதவர்களையும்

சொந்த பந்தம்  இல்லாதவர்களையும் 

அன்பாக கவனிக்கும் பணி உந்தன் பணி...! 




அருவெறுப்பு நோயாளிகளையும் 

கை கழுவி சுத்த கைகளோடு காக்கும் பணி உந்தன் பணி...!

இறைவனின் மறு உருவமாக...! 

நோயாளிகளை காப்பதில் முன் நின்று தன்னலம் இன்றி,

பொது நலம் பெரிதென காக்கும் பணி உந்தன் பணி...!


தன் பிள்ளைகளை வீட்டில் தவிக்க வைத்து..

நோயுற்ற பிள்ளைகளுக்கு தாயாய் இருக்கும் பணி உந்தன் பணி...!

செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா..!

தெய்வமே செய்யும் தொழில் அல்லவோ உந்தன் பணி...!

இன்றும் நம்மில்  தெராசாவாக... நைட்டிங்கேலாக... காணும் பணி உந்தன் பணி...!


பல இரவு தூக்கங்களை மறந்து தனக்குள் இருக்கும் துன்பங்களை மறந்து 

சிரித்த முகத்தோடு மற்றவர்களின் வலிக்கு மருந்து தரும் பணி உந்தன் பணி...!


அமைதி,அன்பு, கருணையின் நிறம் வெண்மை...!

 வெண்ணிற ஆடை அணிந்த தேவதையாக செய்யும் பணி உந்தன் பணி...!

உன்னை செவிலியர் என்பதைவிட...!

தேசத்தின் சமூக சேவையின் தேவதை என்றே சொல்லலாமோ


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)