கலையின் ஹைக்கூ கவிதைகள்!

Su.tha Arivalagan
Jun 17, 2026,04:37 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


சுட்டெரிக்கும் வெயில்;

தன்  புடவையையே

குடையாக்கிய தாய்!


​ஓடிக்கொண்டே இருக்கிறது கடிகாரம்;

நகராமல் நிற்கிறது

கடந்த கால நினைவுகள்!


மரண வீட்டின்

அழுகுரல்களுக்கு நடுவே,

பசிக்கு அழும் குழந்தை!


நிலவொளியில்

பளபளக்கிறது...

பிச்சைக்காரனின் காலிப் பாத்திரம்!




கான்கிரீட் காடுகள்;

கூடு கட்ட வழியின்றி

மின்சாரக் கம்பியில் குருவிகள்!


வியர்வை நிலத்தில் சிந்தியது.

விளைந்தது நெல்மணி,

வாடியது விவசாயி முகம்!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)