சுதந்திர காற்று (கலையின் ஹைக்கூ கவிதைகள்)
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
எனது உயிர் மூச்சாய்....
சுதந்திர காற்று .
சுகமாய் சுவாசிக்கிறேன்.
சிறகு முளைத்த பறவை .
எல்லைகளற்ற வானம்.
விடுதலை காற்றில் பறப்பதை
யாராலும் தடுக்க முடியாது.
மூச்சைவிட்ட தியாகிகளின்
சுவாசம் நின்று போனது ..! எதனால்.?
விடுதலை காற்று கிடைக்காததால் .
மூவர்ணம் தாங்கி ,
தியாகம், அமைதி, செழிப்பு ஓங்கி ,
அசோகச் சக்கரத்தில் சுழன்று ,
விடுதலைக் காற்று
சுதந்திர தேவியாய் பவனி வருகிறாள்.
பல நூற்றாண்டாய் ...
பாரம் சுமக்கிறாள் பெண்.
நாடு விடுதலை பெற்றது தெரியாமல் .
ஆண்டாண்டு காலமாய் பெண்ணை ...
அடக்கி ஆள்கிறான் ஆண் .
நம் நாட்டு மக்கள் சுதந்திரம்
பெற்று விட்டதை மறந்து.
சுதந்திரத்தைப் பற்றி..
மாணவனை இரண்டு நிமிடங்கள்
பேசச் சொல்கிறார் ஆசிரியர்.
கையில் பிரம்புடன்..
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)