கள்ளக்குறிச்சி பூங்காவில் களை கட்டும் கூட்டம்.. படகு சவாரி, நீச்சல் குளம்.. கொண்டாட்டம்!

Su.tha Arivalagan
Dec 30, 2025,01:43 PM IST

- சுமதி சிவக்குமார்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் பூங்காவில் கூட்டம் அலைமோதுகிறது. அரையாண்டு விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடும் சிறுவர்களால் பூங்கா களை கட்டிக் காணப்படுகிறது.


கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா, தற்போது பள்ளி மாணவர்களின் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு இந்த பூங்கா ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாகத் திகழ்கிறது.


இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில், பொதுமக்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.




5 படகுகளைக் கொண்ட படகு சவாரி, 2 சிறுவர் நீச்சல் குளங்கள் மற்றும் கண்ணைக் கவரும் சிறிய செயற்கை மலை அருவி. சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல்கள், சறுக்கல்கள் மற்றும் சீசா (See-Saw) விளையாட்டுக்கள். பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காகப் பிரத்யேக நடைபாதை வசதி உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன.


பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மிகக் குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் என்று பார்த்தால், ஒரு நபருக்கு ₹10 மட்டுமே. இருசக்கர வாகனங்களுக்கு ₹5ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


நீச்சல் குளத்தில், அரை மணி நேரம் குளிப்பதற்கு ஒரு நபருக்கு ₹25 வசூலிக்கப்படும். 4 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு படகு சவாரிக்கான கட்டணம், அரை மணி நேரப் பயணத்திற்கு ₹100 மட்டுமே.


தற்போது விடுமுறை காலம் என்பதால், தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து நீர் விளையாட்டுகளிலும், பூங்காவிலும் விளையாடி மகிழ்கின்றனர். கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற வசதியுடன் கூடிய இத்தகைய பொழுதுபோக்கு தளம் அமைந்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)