சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
டெல்லி: தக்லைஃப் படத்தின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க தேவையில்லை. அதே சமயம் கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. தான் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து, கோர்ட் ஆதரவுடன் கர்நாடகாவில் தக்ஃலைப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதியும் பெற்றதால் மீண்டும் சினிமாவில் தான் ஒரு முன்னோடி என்பதை கமல்ஹாசன் நிரூபித்துள்ளார்.
இன்றைய தேதியில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே சீனியர் நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன் தான். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமான கமல்ஹாசன், இன்று திரையுலக பிதாமகர்களில் ஒருவராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.
சினிமாவில் அவர் தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், இசை, நடன இயக்குனர், அசிஸ்டென்ட் டைரக்டர் என சினிமாவின் பல பரிமாணங்களை, நுணுக்கங்களை அறிந்தவர் கமல். அவர் அளவுக்கு திரையுலகின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தியவர், முதன்மைகளை ஏற்படுத்தியவர் என்ற பெருமை கமலுக்கு உண்டு. குறிப்பாக பல தொழில்நுட்பங்களை முதன் முதலில் தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர் கமல் தான். 1981 ம் ஆண்டு ரிலீசான விக்ரம் படத்திலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டார். அதே போல் கேபிள் டிவி.,க்கள் வந்தால் அது சினிமாவிற்கும், தியேட்டர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்த்த சமயத்தில், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் கமல்ஹாசன். கேபிள் டிவி வந்தால் சினிமா வளரும் என்று அன்றே சொல்லி, ஆதரவும் அளித்தார். அவர் சொன்னது போலவே கேபிள் டிவிக்களின் வருகைக்கு பிறகு சினிமாவின் வளர்ச்சி பெரிய அளவில் இருந்தது.
அதேபோல திருட்டு விசிடி பிரச்சினை உருவெடுத்தபோது, தயாரிப்பாளர்களே படத்தை சிடியில் வெளியிட்டு விடலாம்.. அப்படிச் செய்தால் திருட்டு விசிடி தானாகவே ஒழியும் என்றார். மேலும் வீடு தேடி இனி படங்கள் வரும் என்றும் முன்கூட்டியே கணித்தவர் கமல்ஹாசன். அதுதான் பின்னர் ஓடிடியாக வந்து சேர்ந்தது.
கொரோனா பரவல் காலத்தில் சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்ட போது ஓடிடி.,யில் படத்தை ரிலீஸ் செய்து, சினிமாவை வீட்டிற்கே கொண்டு வந்தார்கள். அப்போதுதான் கமல்ஹாசனின் கணிப்புகளைப் பார்த்து பலரும் வியந்தனர். ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் கமல் அதற்கு ஆதரவு அளித்தார். நாளை ஓடிடி.,க்கள் தான் சினிமாக்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்றார். அதே போல் இன்று தியேட்டர்களின் திரையிட முடியாத பல சிறிய பட்ஜெட் படங்களுக்கு வாழ்வு தந்து, வருமானத்தையும், ஆதரவையும் ஓடிடி தளம் அளித்து வருகிறது. ஓடிடியைத் தவிர்த்து ஒரு வாழ்க்கையை நம்மால் பார்க்க முடியுமா!
இப்படி சினிமாவில் பல விஷயங்களுக்கும் முன்னோடியாக இருந்த கமல், இன்று மொழியின் பெயரால் சினிமாவை எதிர்த்து போராட்டம் நடத்தும் பல்வேறு அமைப்புக்களுக்கு எதிரான ஒரு சட்ட நடவடிக்கையையும் கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பொதுவாக ஒரு சினிமாவிற்கு எதிராக ஏதாவது அமைப்புகள் அல்லது மாநிலங்கள் போராட்டம் நடத்தினால், இனி அங்கு நம் மொழி படங்களை ரிலீஸ் செய்ய முடியாதோ என்ற அச்சம் காரணமாக வேறு வழி இல்லாமல் அந்த அமைப்புக்களின் நிபந்தனைகளை ஏற்று மன்னிப்பு கேட்பதும், படத்தில் சில காட்சிகளை நீக்குவதும் போன்ற அடி பணிந்து போகும் நிலையே இருந்தது.
குறிப்பாக கர்நாடகத்தில் இதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். காவிரிப் பிரச்சினையா.. தமிழ்ப் படங்களை நிறுத்து.. யாராவது ஏதாவது தமிழ்நாட்டில் பேசி விட்டார்களா உடனே படத்தை நிறுத்து என்று எடுத்ததற்கெல்லாம் தமிழ் சினிமாவின் கை வைப்பதை கர்நாடகத்தில் சிலர் வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த தமிழ்த் திரையுலகில் யாருமே எந்த அமைப்புமே சட்டரீதியாக, ஆக்கப்பூர்வமாக எதையுமே செய்ததில்லை. அவ்வப்போது பேச்சு நடத்தி, மன்னிப்பு கேட்டு சமரசமாகத்தான் போய் வந்தனர்.
ஆனால் முதல் முறையாக செய்யாத தவறுக்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சட்டரீதியாகவும் இதை அணுகி தனது நிலைப்பாடு சரி உங்களது நிலைப்பாடு தவறு என்பதை நிலை நிறுத்தி அசத்தியுள்ளார் கமல்ஹாசன்.
மன்னிப்பு கேட்பது மட்டுமே கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய ஒரே தீர்வு என கர்நாடக ஐகோர்ட்டே கூறிய போதும் கூட, மன்னிப்பு கேட்க முடியாது என கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்து விட்டார் கமல். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் எடுத்த நிலைப்பாட்டை சரி என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசுக்கும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட்டின் நிலைப்பாடு தவறு என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டும். இனியும் மொழியின் பெயரால் தமிழ் சினிமாக்களுக்கு கர்நாடகத்தில் அடக்குமுறையில் ஈடுபடுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவே இதைப் பார்க்கி வேண்டும்.
தமிழ்ப் படங்களுக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் கமல்ஹாசன் வழக்கை மேற்கோள் காட்டி சட்டரீதியான நிவாரணம் தமிழ் படங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சினிமாக்களுக்கு அரசின் பாதுகாப்பு கிடைக்க வழி செய்வதிலும் கமல்ஹாசன் தான் ஒரு முன்னோடி என நிரூபித்துள்ளார்.
இனி எந்த சினிமா ரிலீசுக்கு எதிராகவும் எந்த அமைப்போ அல்லது மாநிலமோ எதிர்ப்போ தடையோ விதிக்க முடியாது. அப்படி செய்தால் கமல் வழியில் கோர்ட்டில் சென்று முறையிட்டால் சட்டரீதியான பாதுகாப்புடன் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். கமலின் இந்த செயல்பாடும் சினிமா துறைக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அளித்துள்ளது. அந்த வகையில் இப்போதும் கமல்ஹாசன்தான் தமிழ் சினிமாவுக்கு ஒரு காட்பாதராக உருவெடுத்துள்ளார்.
உண்மையில் கமல்ஹாசனின் போராட்டத்தை தமிழ்த் திரையுலக அமைப்புகள்தான் கையில் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் கமல்ஹாசனை தனியாக போராட விட்டு விட்டு அவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் உண்மையில் வருத்தத்திற்குரியது.. ஆனாலும் கமல்ஹாசன் தனக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகுக்கும் சேர்த்தே நல்லது செய்துள்ளார்.