ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

Su.tha Arivalagan
Dec 08, 2025,09:54 AM IST

- அ.சீ. லாவண்யா


காஞ்சிபுரம்:  3,500 ஆண்டு வரலாறு கொண்ட கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் இன்று காலை மகா குடமுழுக்கு விழா விமரிசையாக நடந்தேறியது. 


ஆன்மிக பூரிப்பில் கோலாகலமாக நடந்து முடிந்த விழாவை, விடியற்காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.


குடமுழுக்கு யாகங்கள், வேத ஓதல்கள், திருவிழா இசை ஆகியவை கோயில் முழுவதும் புனித அதிர்வுகளை பரப்பியது. சிவாசாரியர்கள் தலைமையில் நடைபெற்ற யாகசாலையில் புனித தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் சுற்றுப்புறம் ஆன்மீக ஒளியில் ஜொலித்து எழுந்தது.




குடமுழுக்கு நேரம் நெருங்கியபோது, கோபுரத்தின் உச்சியில் இருந்து புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டதும், "ஓம் நமசிவாய" "தென்னானுடைய சிவனே போற்றி" எனும் முழக்கங்கள் முழு நகரையே ஆன்மிக ஒலியில் சிலிர்க்க செய்தன.


 கோயில் சுற்றுப்புறம் முழுவதும் மக்கள் நெரிசல் இருந்த போதிலும், விழா முழுவதும் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றது. அதற்கேற்ற வகையில் மிக பலத்த, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்திருந்தன. பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட பிற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.


ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் நகரமே இன்று ஒரு ஆன்மீகத் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.


(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)