தேவகோட்டை பள்ளியில்.. கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய மாணவர்கள்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த கலை விழாவின்போது கலந்து கொண்டவர்களை மாணவி நந்தனா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவி ஹாசினி நன்றி கூறினார்.
நிகழ்வில் பரத நாட்டியம், மழலையின் பேச்சு ,மழலைகளின் குழு நடனம், உழைப்பை வலியுறுத்தும் கோலாட்டம் , முருகனின் பாடலுக்கான குழு நடனம் ,கண்ணை கவரும் மழலைகளின் குழு நடனம் என அருமையாக ஒரு மணி நேரம் மாணவர்கள் பார்ப்பவர்களை அசர வைத்தனர்.
தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மிக பெரிய மேடையில் இப்பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மாணவ மாணவியர் நடனமாடியது அத்தனை நேர்த்தியாக காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக அதைப் பார்த்தவர்கள் பாராட்டினர்.