இது எல்லா இடங்களிலும் நடப்பது தான்... பெங்களூரு சம்பவம் பற்றி சித்தராமைய்யா கருத்து
பெங்களுரு : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். இந்த விபத்து குறித்து அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாஜக இந்த சம்பவத்திற்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. "இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எங்கள் அரசு இதில் அரசியல் செய்யாது. நான் ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன். மக்கள் மைதானத்தின் கதவுகளைக் கூட உடைத்துவிட்டனர். அங்கு ஒரு நெரிசல் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே அமர முடியும், ஆனால் 2-3 லட்சம் பேர் வந்தனர்," என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், "இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன; அவற்றை ஒப்பிட்டு நான் அதை நியாயப்படுத்தப் போவதில்லை. கும்பமேளாவில் 50-60 பேர் இறந்தனர். நான் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் விமர்சித்தால் அது வேறு விஷயம். கர்நாடக அரசோ நானோ விமர்சித்தோமா?" என்று கேள்வி எழுப்பினார்.
கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் சித்தராமையாவும், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். முறையான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அரசு இந்த நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அவர் சாடினார். "லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசு தயாராக இல்லையா? இது அரசின் பொறுப்பல்லவா?" என்று விஜயேந்திரா கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷியும் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "மோசமான திட்டமிடல் மற்றும் கூட்ட நெரிசலை கையாள முடியாததால் ஏற்பட்ட இந்த இழப்பு வேதனை அளிக்கிறது," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சரியான ஒருங்கிணைப்பு மற்றும் அவசர கால தயார் நிலையுடன் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். "கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, அவசர சேவைகளை ஈடுபடுத்தாமல் அரசு அலட்சியமாக செயல்பட்டது. இதற்கு யார் பொறுப்பு என்பதை நிர்ணயிக்க வேண்டும்," என்றும் ஜோஷி வலியுறுத்தினார்.
சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மைதானத்தின் கொள்ளளவை மீறி அதிகமான மக்களை அனுமதித்தது ஏன்? போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது ஏன்? அவசர கால வெளியேறும் வழிகள் சரியாக பராமரிக்கப்படவில்லையா? போன்ற கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.