Thuglife: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கர்நாடக ஐகோர்ட் உத்தரவு.. கேட்பாரா கமல்?
பெங்களூரு : கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்பது ஒன்று தான் தீர்வு என கர்நாடக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிற்பகல் 02.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தங் லைஃப். இந்த படம் ஜூன் 05ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் என்பதால் தக்லைஃப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சமயத்தில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படத்தின் ஆடியோ விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கன்னட அமைப்புகள் பலவும் எதிர்ப்பு குரல் எழுப்பியும், தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், தான் உண்மையை தான் சொன்னதாகவும் கமல் உறுதியாக கூறி வந்தார். இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவும் தெரிவித்து வந்தனர். இருந்தாலும் கர்நாடகாவில் கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது.
இந்நிலையில் தற்போதுள்ள பதற்றமான சூழலில் தக்லைஃப் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற கர்நாடக ஐகோர்ட் கமல்ஹாசனுக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பியது. "தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளதா? எதன் அடிப்படையில் அந்த கருத்தை தெரிவித்தீர்கள். கமல்ஹாசன் மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது. கமல்ஹாசன் பேச்சால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்பது ஒன்றே இதற்கு தீர்வு" என கர்நாடக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 02.30 மணிக்கு இவ்வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை கர்நாடக ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா அல்லது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா?