கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!

Su.tha Arivalagan
Jan 31, 2026,12:42 PM IST

பெங்களூரு: கர்நாடகத்தில் பிரபலமாக உள்ள கான்பிடன்ட் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபரான சி.ஜே. ராய் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


அவரது அலுவலகத்தில் வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவர் உயிரை மாய்த்துள்ளார்.


பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள கான்பிடன்ட் குரூப் தலைமையகத்தில் நேற்று மதியம் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 57 வயதான சி.ஜே. ராய், தனது அலுவலக அறையில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.




கடந்த மூன்று நாட்களாக சி.ஜே. ராயின் அலுவலகம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஐடி அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.


சி.ஜே. ராயின் சகோதரர் பாபு இதுகுறித்துக் கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கடும் நெருக்கடியே தனது சகோதரரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவருக்கு நிதி நெருக்கடியோ அல்லது கடன் தொல்லையோ இல்லை என்றும், ஐடி அதிகாரிகளின் விசாரணையால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான கான்பிடன்ட் குரூப்பின் நிறுவனர்தான் இந்த ராய்.  அது மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடித்த 'காசநோவா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார்.


சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ள இவர், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்துள்ளார். மிகவும் பிரபலமானவரும் கூட.


இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், உண்மை நிலை கண்டறியப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால்:  உதவிக்கு 104 (தமிழக அரசு ஹெல்ப்லைன்) அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மையத்தை (044-24640050) தொடர்பு கொள்ளவும்.