'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பதிப்புரிமை குறித்த வசனம் இடம் பெற்றதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு, தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ விளக்கம் அளித்து, தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், 'கருப்பு' திரைப்படத்தில் இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது, கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே கையாளப்பட்டது என்றும், இது முற்றிலும் ஒரு தற்செயலான நிகழ்வு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக ஒட்டுமொத்த இசை உலகையும் தனது அசாத்திய திறமையால் ஆட்சி செய்து வரும் இசை அரசனான இளையராஜாவை, எவ்விதத்திலும் காயப்படுத்தும் எண்ணமோ அல்லது அவரது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கமோ படக்குழுவினருக்குச் சிறிதும் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த வசனம் ஒரு பொதுவான நையாண்டிச் சூழலின் பகுதியாக வைக்கப்பட்டதே தவிர, தனிப்பட்ட முறையில் அவர் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தாழ்மையான வருத்தம்:
எந்தவொரு உள்நோக்கமும் இன்றி தற்செயலாக வைக்கப்பட்ட இந்தக் காட்சியின் காரணமாக, மாண்புமிகு இசைஞானி இளையராஜா அவர்களோ, அவரைச் சார்ந்தவர்களோ, அவரது உலகளாவிய கோடிக்கணக்கான ரசிகர்களோ அல்லது பொதுமக்களோ யாரேனும் மன வேதனை அடைந்திருந்தால், அதற்குத் தங்களது ஆழமான, தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
திரைப்படத்தில் மாற்றம்:
இசைஞானி இளையராஜாவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், அவர் மீது கொண்டுள்ள எல்லையற்ற மரியாதையின் காரணமாகவும், 'கருப்பு' திரைப்படத்தின் வருங்காலப் பதிப்புகள் மற்றும் அடுத்தகட்ட வெளியீடுகளில் சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ முடிவு செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பதிப்புரிமை வசன விவகாரத்திற்கு, தயாரிப்பு நிறுவனம் உடனடியாகப் பொறுப்பேற்று முறைப்படி விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளதன் மூலம் இந்த சர்ச்சை தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள கருப்பு படம் உலகம் முழுவதிலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. ரிலீசான ஒரு வாரத்திற்குள் பல கோடிகளை வசூலித்துள்ள கருப்பு படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.