மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

Su.tha Arivalagan
Jan 27, 2026,10:12 AM IST

கரூர்: திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேட்டுள்ளார்.


காங்கிரஸ், திமுக இடையே பூசல் நிலவி வருகிறது. பகிரங்கமாக இது பெரிய அளவில் இதுவரை வெடிக்காவிட்டாலும் கூட 2ம் கட்டத் தலைவர்கள் மத்தியில் சமூகவலைதளங்களில் மோதல் வெடித்தபடியே இருக்கிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்.பியின் சில எக்ஸ் தளப் பதிவுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பின. அதேபோல பிரவீன் சக்கவர்த்தியின் பேச்சுக்களும் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியபடியே உள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது கரூர் எம்.பி. ஜோதிமணியையும் திமுகவினர் இழுத்துள்ளனர்.


மதுரையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கோ. தளபதி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு மீண்டும் சீட் தரக் கூடாது என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தற்போது ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை  எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை  கேட்கவில்லை. 


அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.


களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள்  உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும்,  முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான்  அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம். 


கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட  பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். 


வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது.


தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது என்று அவர் கூறியுள்ளார்.


காங்கிரஸ் - திமுக இடையே நிலவும் இந்த 2ம் கட்டத் தலைவர்கள் மத்தியிலான பூசல் அதிகரித்துக் கொண்டிருப்பது கூட்டணிக்கு நல்லதல்ல. அடிமட்டத் தொண்டர்கள் அளவில் அது போய் விட்டால் தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூட்டணிக் கட்சிகள் கவலையில் உள்ளன.