கரூரில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேதனை

Su.tha Arivalagan
Sep 27, 2025,10:12 PM IST

சென்னை: கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் வேதனை வெளியிட்டுள்ளார்.


கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோரிடையே ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசலில் சிக்கி 33 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவரின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோல நடப்பது இதுவே முதல் முறை. விஜய்க்குக் கூடிய மிகப் பெரிய கூட்டம் தற்போது அவருக்கே எதிராக போய் விட்டது.




இந்த சம்பவம் குறித்து தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தும் இதுகுறித்து வேதனை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் வேதனை


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.


நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


நடிகை குஷ்பு இரங்கல்


நடிகர் விஜய் அவர்களின் பேரணியில் கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் அவர்களுக்கு அளிப்பாராக. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இறைவன் துணை நிற்பாராக.


நடிகர் பார்த்திபன்


கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்