கரூர் சம்பவம்.. போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்ததா?.. விசாரணை கோருகிறார் அண்ணாமலை
சென்னை: கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
போதிய பாதுகாப்பை செய்யாதது ஏன்?
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் - வானதி சீனிவாசன்
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதறுகிறது. இன்னும் பலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது.
பெரும் மக்கள் கூட்டத்தை கையாள்வதில் அரசும், காவல்துறையும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. மக்களுக்காகத்தான் அரசியல் கட்சிகளும், அரசும் இருக்கின்றன. எனவே, மக்கள் உயிரிழக்க காரணமாக இருக்கும் எதையும் அனுமதிக்க கூடாது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.