கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை
டெல்லி: தவெக தலைவர் விஜய்யிடம், நாளை டெல்லியில் சிபிஐ சிறப்பு விசாரணை நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் (Karur Stampede) தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லவிருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் தமிழக காவல்துறை விசாரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது பல்வேறு அதிகாரிகள், தவெக தலைவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் உச்சமாக தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஜனவரி 12ம் தேதி அதாவது நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக விஜய் டெல்லி செல்லவுள்ளார். இன்று மாலை அல்லது நாளை அதிகாலையில் அவர் டெல்லி செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே விஜய்யின் கட்சி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் போன்றோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. மேலும், நேற்று (ஜனவரி 10) கரூரில் விஜய்யின் பிரசார வாகனத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இந்த சிபிஐ விசாரணை நடைபெறுவதை உறுதி செய்துள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கியமான சட்டப்போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்போது போதிய பாதுகாப்பு அளிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் தவெக முறையிட்டுள்ளது. அதை ஏற்றுள்ள டெல்லி காவல்துறை, உரிய பாதுகாப்பு நிச்சயம் அளிக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளது.