கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு

Meenakshi
Sep 29, 2025,05:09 PM IST

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக பாஜக சார்பில் எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் 2 கட்ட சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், தற்போது விஜய் கடந்த 27ம் தேதி தனது 3வது கட்ட சுற்றுப்பயணத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது கரூர் மாவட்டத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது.




இதனால், அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழ ஆரம்பித்தனர். அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் 5 பேர், பெண்கள் 17 பேர் மற்றும் ஆண்கள் 12 பேர் உயிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தினால் ஒட்டு மொத்த தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார்.


இதனையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஆணையம் அமைத்தார். நெரிசலில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  


இந்த நிலையில், கரூரில் ஏற்பட்டகூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க ஹேமமாலினி எம்பி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை  தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த குழுவில், அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் கரூர் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களை இந்த குழு நேரில் சந்திக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.