கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
சென்னை: கரூர் துயரச் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2வது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து கரூர் துயரம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்கையில், கரூர் மாவட்டத்தில் நடந்த துயரச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியையும், உறவுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் துயரச் சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள். தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவெக கூட்டத்தில் மக்களுக்கு குடிநீர் தரப்படவில்லை, உணவு வழங்கப்படவில்லை, இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது.
எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டுதான் நடந்து வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது கழக அரசு. இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.