காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யாருமில்லை.. கண்ணதாசன் படைத்த காவியக் காதல் விருந்து!

Su.tha Arivalagan
Jun 14, 2025,04:17 PM IST

- தென்றல்


தமிழ் கடவுளாய் போற்றப்படும் முருகப்பெருமான் வள்ளியை எப்படி மனம் செய்து கொண்டார் தெரியுமா? வயலில் பறவைகள் நெற்பயிரை கொத்தி சேதம் செய்து விடாதிருக்க காவல் நின்ற வள்ளியை வயதான கிழவன் வடிவம் எடுத்து நெருங்குகிறார். காதல் லீலைகள் செய்கிறார் என்னை மணந்து கொள் என்கிறார். 


முருகனை மனதில் வடித்து வைத்திருக்கும் வள்ளி கிழவனை மணக்க சம்மதிப்பாளா? அண்ணன் கணபதியை உதவிக்கு கூப்பிடுகிறான் வேலவன். அவர் யானை உருவம் எடுத்து வள்ளியை துரத்த அவள் ஓடி வந்து கிழவனை கட்டிப்பிடித்து கொள்ள மாறுவேடம் கலைத்து கந்தன் அழகனாய் காட்சி தர முருகன் வள்ளி திருமணம் நடக்கிறது. 



இதேபோல ஒரு சூழல் காதலிக்க நேரமில்லை என்ற பழைய திரைப்படத்தில் இருக்கிறது தெரியுமா? கிழவன் வேடம் அணிந்திருக்கும் தன் காதலனை காதலிக்கு அடையாளம் தெரியவில்லை. வயதான உருவில் காதலியிடம் வந்து உரசுவதும் தொடுவதுமாய் இருக்க அவளுக்கு கோபம் வருகிறது. இதுதான் காட்சி. 


வயதான கிழவன் தன் காதலை சொல்லுவதாய் பாட்டு எழுதுங்கள் என்று கண்ணதாசன் அவர்களிடம் கொடுத்தார்கள். பாட்டாய் எழுதி இருக்கிறார் கண்ணதாசன்..  இந்த காவிய காதலுக்கு புது இலக்கணமே படைத்திருக்கிறார். 


இளவயதில் "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை. வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் இல்லை" என்கிறான் வயதான காதலன். "பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை (கட்டை பிரம்மச்சாரி அல்லவா) வஞ்சி உன்னை காணும் வரை மனதும் துடித்ததில்லை.. பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழி விழுந்து ரெண்டும் கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி"


Videoகாதலிக்க நேரமில்லை.. கண்ணதாசனின் தமிழ் விருந்து!


என்ன செய்வது இந்த வயதில் தான் உன்னை பார்க்க கொடுத்து வைத்திருக்கிறது என்கிறார். அடுத்து தன் காதலை நியாயப்படுத்த ஒரு உவமை சொல்கிறார் பாருங்கள். "காயிலே சுவைப்பதில்லை கணிந்ததும் கசப்பதில்லை நோயில்லா உடலிருந்தால் நூறுவரை காதல் வரும். அடுத்த முக்கியமான வரியை கவனியுங்கள் "மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த சாமியை மனமுடித்தால் சந்தோஷம் குறைவதில்லை" என்று சொல்லிவிட்டு கிழவன் வேடத்தை கலைத்துவிட்டு இளமை தோற்றத்தோடு பாடுகிறான் காதலன்.


"அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன் பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன் இந்திரனை கண்டு வந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன் சந்திரனை கண்டு வந்தேன் சரசம் நடத்த வந்தேன்" என்று பாட, அவளுக்கும் அவன் தன் காதலன் என்று தெரிந்துவிட்டது. மகிழ்ச்சியில் அவளும் துள்ளி குதிக்கிறாள்.


அப்புறம் என்ன "காதலிக்க நேரம் உண்டு கன்னி உண்டு காளை உண்டு வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு" என்று பதிலுக்குப் பாட .. அங்கே காதல் காவியம் சுவையுற அரங்கேறுகிறது..


மீண்டும் பேசலாம்..!


(தென்றல் தொடர்ந்து வீசும்)