Kalaiarasi Poems: உள்ளம்.. நீ தான் உலகில் ஆழமானவளோ?

Su.tha Arivalagan
Apr 10, 2026,01:04 PM IST

- கவி.கலை


உள்ளம் 


நீ தான் உலகில் ஆழமானவளோ?  

உன் ஆழம் அறியாமல்தான்  

அமுக்கப்படுகிறேனோ?  

நீ தான் பெரிய இரகசியஅறையோ ?  

உன் இரகசியம் அறியாமல்தான் 

அடங்கிப் போகிறேனோ?  

நீ தான் அன்பின் பிறப்பிடமோ ?  

உன் அன்பை அடையாமல்தான்  

அடிமையாகிறேனோ?  

நீ தான் மரணப்படுக்கையின் கல்லறையோ? 

உன் வலிமை அறியாமல் தான் 

புதைக்கப்படுகிறேனோ ? 

உன்னுள் நான்.


--


வறுமை 


 


என்னைத் தொடாமல்  

உயரம் சென்றவர்களும் உண்டு,  

என்னைத் தொட்டு 

இமயம் வென்றவர்களும் உண்டு, 

பணக்காரர்களுக்குப் பக்கத்தில் வராதவன்,  

படைப்பாளிகளுக்குப் பாதை காட்டுபவன், 

சிலருக்கு அடக்கம் தந்து 

ஆக்கம் செய்பவன்!  

என்னால் வாடிய போதும்  

வசந்தமாய் வாழ்வோர் பலர்,  

என்னைத் தாண்டிய போதும்  

வஞ்சனையால் வீழ்வோர் பலர்.  

சாமானியராய் பிறந்தவரையும்  

சாதிக்க மறந்தவரையும்  

சாதிக்கத் தூண்டும் 

சக்திவாய்ந்த வறுமை நான்.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)