துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!

Su.tha Arivalagan
Nov 05, 2025,05:15 PM IST

பத்தனம்திட்டா: காலாவதி தேதி போடாமல் பிரியாணி அரிசியை விற்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கப் போய் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.


பத்தனம்திட்டா நுகர்வோர் குறைதீர் ஆணையம், நடிகர் துல்கர் சல்மானுக்கு இதுதொடர்பாக விசாரணைக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வருமாறு துல்கர் சல்மான் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


பத்தனம்திட்டாவைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்பவர் பி.என். ஜெயராஜன் என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார். தனது புகாரில், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 50 கிலோ ரோஸ் பிராண்ட் பிரியாணி அரிசி வாங்கினேன். ஆனால், அந்த அரிசிப் பையில் தயாரிப்பு தேதி அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை.




இந்த அரிசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பிரியாணியை உண்ட விருந்தினர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புகாரில், ரோஸ் பிராண்ட் பிரியாணி அரிசியின் மேலாண்மை இயக்குநர், அரிசி வாங்கப்பட்ட பத்தனம்திட்டாவில் உள்ள மலபார் பிரியாணி மற்றும் ஸ்பைசஸ் நிறுவன மேலாளர், மற்றும் இந்த அரிசியை விளம்பரப்படுத்திய விளம்பரப் படத்தில் நடித்த நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


மூவரும் குறிப்பிட்ட தேதியில் ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


துல்கர் சல்மான் நடித்த விளம்பரத்தைப் பார்த்துதான் தான் இந்த அரிசியை வாங்கியதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் தனது கேட்டரிங் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும், இதனால் பல திருமண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கில், அரிசியின் விலை ரூ. 10,250, நீதிமன்ற செலவுகள் மற்றும் ரூ. 5 லட்சம் இழப்பீடு ஆகியவற்றை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.