உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி...3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!

Meenakshi
Jun 04, 2025,05:29 PM IST

திருவனந்தபுரம்: 3 வயது சிறுவனின் கோரிக்கையை ஏற்று கேரள அரசு, இனி அங்கன்வாடிகளில் உப்புமாவிற்கு பதிலாக முட்டைபிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷங்கு என்ற சிறுவன் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வைரலாகியது. ஷங்கு தனது தாயாரிடம் வீட்டில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சி அது. அந்த வீடியோவில், தினமும் அங்கன்வாடியில் உப்புமா தான் வழங்கப்படுகிறது என்றும், அதற்கு பதிலாக பிர்னாணி (பிரியாணி) மற்றும் பொறிச்ச கோழி வேண்டும் என்று கேட்டிருக்கும்  வீடியோவை ஷங்குவின் தாயார் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். 


அப்போது அந்த வீடியோ பரவி வைரலாகி வருகிறது. அதுமட்டும் இன்றி அந்த வீடியோ கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கும் சென்றது. அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் விதத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 




அதில், ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக் கொண்டு மெனு மறு ஆய்வு செய்யப்படும். குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரளா அரசாங்கம் அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேம்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஷங்குவின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். அங்கன்வாடி மெனு மாற்றப்படும் எனக் கூறியிருந்தார்.


இந்தநிலையில், நேற்று அங்கன்வாடி பள்ளிகளின் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்தது. அதில் அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அங்கன்வாடிகளில் ஒருங்கிணைந்த உணவு மெனுவை அமல்படுத்துவது இதுவே முதன்முறை. இந்த உணவு அட்டவணையை பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் அமல்படுத்துகிறோம். இதில் முட்டை பிரியாணி, புலாவ் சேர்க்கப்பட்டுள்ளது.  குழந்தைகளின் உணவுகளில் அதிகளவு உப்பு, சர்க்கரை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கும் விதத்தில்  இந்த உணவு  மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரத்திற்கு இரண்டு முறை வழங்கப்பட்ட முட்டை, பால் இனி வாரத்திற்கு 3 முறை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.