ராமாயி...ராமாயி... இங்க பாரு.. (கோடாங்கி.. திகில் தொடர்-3)

Su.tha Arivalagan
Feb 20, 2026,10:31 AM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


டப...டப....டப....டப...புல்லட் சத்தம் காதைப் பிளந்தது. கள்ளிப்பட்டி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


கும்பிடப் போன‌ தெய்வம் குறுக்கே வந்தது போல் வந்து இறங்கினார் வீரன். ஹெட் கான்ஸ்டபிள்  வீரன். பெயருக்கு ஏற்றார் போல் நல்ல உயரமும், முறுக்கு மீசையும், பயமுறுத்தும் பார்வையும் அவருக்கு உண்டு..


இரவு நேரங்களில் அவர் ரோந்து சென்றால் போதும்.... அவன் அவன் துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிப் பதுங்கி விடுவான்.


கள்ளிப்பட்டி கிராமத்தில மடத்துல நடக்குற சீட்டாட்டக் கும்பலைப் பிடிக்க்கவும் வீரன் வந்திருப்பதால்‌ வீரனை அனைவருக்கும் பரிச்சயம்.


மயக்கம் போட்டு  விழுந்து கிடந்த ராமாயியை நாலைந்து பெண்கள் சேர்ந்து முகத்தில் தண்ணீர் தெளித்து.... காற்றோட்டமாக உட்கார வைத்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்கள். வீரன்‌ கருப்பையாவின் காதில் ஏதோ முணுமுணுக்கிறார்.


ராமாயி...ராமாயி... இங்க பாரு...என்னய பாரு...உன் மகளுக்கு ஒன்னும் இல்ல.... உசுரோட தான் இருக்காம்.....நீ கும்பிடுற தெய்வம் உன்ன கைவிடல... என்ற கருப்பையாவின் குரலைக் கேட்டு போன உயிர் திரும்பி வந்தது போல நிமிர்ந்து பார்த்தாள் ராமாயி.




வள்ளி...வா வள்ளி...பயப்படாதே.... என்றவாறே சிறுமி கை நீட்டினாள். சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு சிறுமியைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் வள்ளி....


தான் யார்?எங்கு இருக்கிறோம்? எதற்காக சிறுமியுடன் செல்கிறோம் என்று எதுவுமே தெரியாமல் அனிச்சை செயலாக சிறுமியைப் பின் தொடர்கிறார்கள்..... வள்ளியும்..... வள்ளியோடு‌ சேர்ந்து ஐந்து பேரும்.....


ராசாத்தி ராசாத்தி.. பாண்டியம்மாளும் நீயும் போய் ஆளுக்கு ரெண்டு குடம் தண்ணி எடுத்துட்டு வாங்கம்மா....நல்ல வேளையா பெரியசாமி அருளால வந்த மழையும் ஓடிப் போச்சு. அடுப்ப பத்த வச்சுடலாம்.


ஆளுக்கொரு வேலையைப் பார்த்தா தான் வெள்ளனையே வேலய‌ முடிக்க முடியும் என்று பரபரத்துக் கொண்டிருந்தார் வாத்தியார்....


வாத்தியாரின் மனைவி தான் ராசாத்தி.....பராமத்துப்பட்டியில்  ரேசன் கடையில் வேலை பார்க்கும் ராசாத்தி வாத்தியாரின் மாமன் மகள். ராசாத்தியை விரும்பிய வாத்தியார்,மாமனிடம் போராடி ஒருவழியாக ராசாத்தியை திருமணம் செய்து கொண்டார் . சமையல் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.


என்னங்க....என்னங்க....  இங்க வெரசா ஓடி வாங்க....  தண்ணி எடுக்க போன ராசாத்தியின் அலறல் சத்தத்தைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அரண்டு எழுந்தனர்.....அலறல் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினார்கள்....


ராசாத்தி எதையோப் பார்த்து பயந்து‌ போய் நிற்பதைக் கண்ட வாத்தியார்.. ராசாத்தி என்னாச்சு என்னாச்சு என்று தோளைப் பிடித்து உலுக்கினார்...


மிரண்ட விழிகளுடன் ராசாத்தி.....எதையோ கூற‌ முற்படுகிறாள்.அவளால் ‌பேச முடியவில்லை. கையை நீட்டி யாரையோ காண்பித்தாள்...


அவள் கை நீட்டிய‌ திசையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது!


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).


முந்தைய அத்தியாயங்கள்: 1 2