வள்ளி வேற யாரும் இல்ல வாத்தியாரே.. (கோடாங்கி.. திகில் தொடர்-5)

Su.tha Arivalagan
Mar 06, 2026,10:35 AM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


சங்கையா வள்ளி யார் என்று கூற‌ ஆரம்பித்தான்.

"வாத்தியாரே...வள்ளி வேற யாரும் இல்ல வாத்தியாரே.... கள்ளிப்பட்டிக்கு வாக்கப்பட்டு போனாங்கல்ல எங்க பெரியம்மா"....என்றதும்...

கணேசன் ..."ஆமாம்ப்பா நம்ம ராமாயி" என்றார்....

"ஆமா வாத்தியாரே எங்க ராமாயி பெரியம்மா மக தான்‌ இந்த வள்ளி வாத்தியாரே...இந்த வள்ளி...

என் தங்கச்சி...வாத்தியாரே... வள்ளி என் தங்கச்சி"....


போன மாசம் தான் கரிசப்பட்டில கட்டிக் கொடுத்தோம் .... என்னாச்சு ஏதாச்சுனு தெரியலையே....என் தங்கச்சி இந்த நேரத்தில இப்படி வந்து நிக்குதே..... என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வள்ளி யாரென்று கூறினான் சங்கையா....




ராமாயி தன் மகளின் வரவுக்காக சோறு தண்ணி உண்ணாமல் காத்துக் கிடந்தாள்.யார் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை.... அழுது அழுது வறண்ட தொண்டையும் வீங்கிய கண்களுமாய் ராமாயியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வள்ளியின் வருகைக்காக கள்ளிப்பட்டி மக்களும் ராமாயி போலவே காத்துக்  கொண்டிருந்தனர்.


போலிஸ் ஸ்டேசனில் முத்துவை விசாரித்தார் வீரன்.


டேய்...உங்களுக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்.... கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகலங்கறாங்க....அந்தப் பிள்ளைய அங்க கூட்டிட்டுப் போய் என்னடா பண்ணுன?...என்ற வீரனின் கேள்விக்கு உண்மையைக் கூற மறுத்த முத்து... வீரனின் அதிரடி விசாரணையில் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தான்.


முத்து நல்லவன் இல்லை. ஒரு திருடன் ..சரியாக விசாரிக்காமல் ராமாயி ஏமாந்து விட்டாள்‌.அது மட்டுமில்லாமல் 

விசாரணையின்‌‌ போது‌ அவன் சட்டைப்பையில் இருந்து வள்ளியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியும் கீழே விழுந்தது...


நகைக்கு ஆசைப்பட்டு இந்த வேலை செய்திருக்கிறான்.

அவனே வலிய வந்தும் மாட்டியிருக்கிறான்....  என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவன் ஒரு மன‌நோயாளி என்றும் அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வந்தது.


முத்துவின் அம்மா மற்றும் உறவினர்கள் இந்த விசயங்களையெல்லாம் மறைத்து வள்ளியைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள்.


வள்ளியை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று......அவளின் முகத்தில் தண்ணீரை அடித்து கை கால் முகம் எல்லாம் கழுவி விட்டனர் பராமத்துப்பட்டி பெண்கள்.


சங்கையா அருகில் இருக்கும் டீக்கடைக்கு ஓடிப்போய்  டீ வாங்கிட்டு வந்து வள்ளிக்குக் கொடுத்தான்.

 வள்ளி மண்டபத்தில் அப்படியே உறங்கிப் போனாள்.


சமையல் வேலை முடிந்து சாப்பிடும் வேளை வந்தது.அனைவரும் சாப்பிட உட்காரும் போது ... இரண்டு பெண்கள் வள்ளியை எழுப்பி வந்து அவளை சாப்பிட வைத்தனர்.. பின்னர் வள்ளியிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்க ஆரம்பித்தனர். 


வள்ளி சொல்ல சொல்ல சங்கையாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.


பெரியப்பா வழி சொந்தம்னு சொல்லி கரிசப்பட்டில இருந்து வள்ளிய‌ பொண்ணு கேட்டு வந்தாய்ங்க வாத்தியாரே.... மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் கெடையாது.டெய்லர் கடை சொந்தமா இருக்குனு சொன்னாய்ங்க.கொஞ்ச நெலபுலமும் இருக்கு.சொந்தமா காரவீடும் இருக்கு...ஒத்த‌‌ பையன்... அதனால‌ எல்லாமே அவனுக்குத் தான்னு சொன்னாய்ங்க.


பெரியம்மாவுக்கும் இப்ப அடிக்கடி உடம்பு சரியில்லாம‌ போகுது.... அதனால சரியா விசாரிக்காம கொள்ளாம இந்தக் கொலகாரப்பயலுக்கு என் தங்கச்சியக் கட்டிக் குடுத்துப்புட்டோமே... இப்போ அந்தப் புள்ள வாழ்க்கையே நாசமாப் போச்சே.... 


வக்காலி ....அவன‌ வெட்டாம விடமாட்டேன். என் கையில‌‌ கெடச்சான் அவன கண்டந்துண்டமா வெட்டிருவேன் என்று ஆவேசமாகக் கத்தினான் சங்கையா....


கணேசன் பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.. அவர்கள் மூலம் தான் கள்ளிப்பட்டிக்கு தகவல் சென்றது...


வள்ளியை அழைத்துச் செல்ல வீரன் அனுப்பி வைத்த  போலீஸ் அங்கே வந்து சேர்ந்தனர். வள்ளியை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்....


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).


முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3 4