எங்க வந்திருக்க... என் பிள்ளையவா பாடாப்படுத்துற.. (கோடாங்கி.. திகில் தொடர் - 9)
- கவிஞர் க.முருகேஸ்வரி
சங்கையா வள்ளியின் அருகே சென்றான்.
வள்ளி எப்படி இருக்கமா? உனக்கு ஒன்னும் இல்ல.. எத நினைச்சும் பயப்படாத...நானும் அம்மாவும் உன் கூடவே இருக்கோம் என்று வள்ளியை ஆறுதல் படுத்தினான் சங்கையா...
சங்கையாவின் தோளில் சாய்ந்து கத்தி அழுதாள் வள்ளி....
பதறிப்போய் ஓடி வந்த ராமாயி வள்ளியை மடியில் படுக்க வைத்து தலை கோதி தூங்க வைத்தாள்.
அவளுக்குப் பிடித்த ரசமும் துவையலும் வைத்து ஊட்டிவிட்டாள்..
ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குலதெய்வம் அய்யனார் கோவிலுக்கு வள்ளியைக் கூட்டிக் கொண்டு ராமசாமி,சங்கையா, கருப்பையா,பக்கத்து வீட்டு காமாட்சி அனைவரும் கிளம்பினார்கள்.
வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக வீற்றிருந்தார் அய்யனார்...
பொங்கல் வைத்து முடித்து விட்டு பூஜைக்கு ஆயத்தமானார்கள்...
பூசாரி அய்யனாருக்கு தேங்காய் உடைத்து...
பொங்கல் படைத்து ஆரத்தி காட்டினார்...
சூடத்தை ஏத்தி அய்யனாருக்கு காட்டிவிட்டு...
விபூதியை எடுத்து ...வள்ளியைப் பார்த்தார்.
எதிர்பாராத விதமாக திடீரென வள்ளியின் தலையில் ஒரு அடி... எங்க வந்திருக்க... என் பிள்ளையவா பாடாப்படுத்துற... ஓடிப்போ... என்று நாக்கைத் துருத்தியவாறு... பூசாரி கூற.... வள்ளி அலறியடித்து ஓட ஆரம்பித்தாள்.
சங்கையா ஓடிப்போய் வள்ளியைப் பிடித்து நிறுத்தினான். அப்படியே சரிந்து விழுந்தாள் வள்ளி..
பூசாரி ரகசியமாக ராமாயி காதில் ஏதோ சொன்னார்.. பூசாரி சொல்ல சொல்ல ராமாயி அதிர்ச்சியுடன் பூசாரியைப் பார்த்துக் கொண்டே தலையாட்டினாள் ராமாயி.
மறுநாள்....
கருப்பையாவுடன் ராமாயி ஏதோ பேசிக் கொண்டிருப்பதை வள்ளி கவனித்தாள்.
சங்கையாவிடம் ... அண்ணே எனக்கு என்ன ஆச்சு அண்ணே.. என்ன நடக்குதுனே புரியல...
யாரப் பார்த்தாலும் மனசுக்குள்ள அவங்க யாரு என்னன்னு தெரியுதுணே...பேசனும் னு நினைக்குறேன்...பேச்சு வர மாட்டேங்குது... என்று கூறியபடியே அழ ஆரம்பித்தாள் வள்ளி...
உனக்கு ஒன்னும் இல்லமா...
இப்போ நீ நல்லா இருக்கடா....மனச போட்டு குழப்பிக்காத...எதுக்கும் பயப்படாம தைரியமா இரு.... எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன் என்றான் சங்கையா..
பூஜையில இருக்காரு.. உங்கள கொஞ்ச நேரம் உக்கார சொன்னாரு என்ற பெண்ணை நிமிர்ந்து பார்த்தாள் ராமாயி...
மஞ்சள் புடவை...
கை நிறைய கண்ணாடி வளையல்... நெற்றியில் குங்குமம்.. தலை நிறைய மல்லிகை.... சந்தனம்... குங்குமம் ...என கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் ஒரு சில பெண்களில் ஒருத்தி என்று பளிச்சென்று தெரிந்தது....
ராமசாமி, கருப்பையா,சங்கையா மூன்று பேரும் மரத்தடி நிழலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து அவரின் வருகைக்காக காத்திருந்தனர்.
வணக்கம்... வாங்க வாங்க என்ற குரலைக் கேட்டு மூன்று பேரும் எழுந்து நின்றனர்.
காவி வேட்டி வெள்ளை சட்டை.. ஆஜானுபாகுவான கறுத்த உடல் மிரட்டும் பார்வை...
எந்த ஊர்ல இருந்து வந்திருக்கிங்க என்ற கேள்விக்கு ராமாயி.. கள்ளிப்பட்டி சாமி என்றாள்...
அப்படியா..என்ன விஷயமா வந்திருக்கிறீங்க...
ராமாயி நடந்தது அனைத்தையும் கூறினாள்..
அய்யனார் கோவில் பூசாரி சொல்லி பார்க்க வந்ததாகவும் கூறினாள்..
உங்கள நம்பி தான் சாமி வந்திருக்கோம்...
என் பிள்ளைய காப்பாத்தி என் கிட்ட கொடுத்திடுங்க என்று ராமாயி கைகூப்பி கேட்டுக் கொண்டிருந்தாள்...
என்னனு வந்து பார்க்குறேன்...நமக்கு அடங்காத கழுத எங்க இருக்கு..
வெரட்டிவிட்டிரலாம் தாயி...
நம்பிக்கையா போ....
சரி...நான் வர்றேன்.,
புதன்கிழமை காலையில 10 மணிக்கெல்லாம் நான் அங்க இருப்பேன்...
என்னென்ன பொருள் வேணும்னு சொல்றேன்..
ஒரு லிஸ்ட் போட்டுக்கப்பா என்று கருப்பையாவிடம் கூறினார் கோடாங்கி....!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3 4 5 6 7 8