இவர் யார் என்று தெரிகிறதா?
- கா.சா.ஷர்மிளா
இவர் யார் என்று தெரிகிறதா?
நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி வலது கை தருவது இடதுகைக்கு தெரியக்கூடாது என்ற கருத்துக்கு இணங்க பல ஏக்கர் நிலங்களை தானம் அளித்த வள்ளல்
திருநெல்வேலி மாவட்டம் ராமநாதபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சேர்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள்
இந்தியாவிலேயே அதிக அளவிலான படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
2400 படுக்கை வசதிகளைக் கொண்டது இந்த கல்லூரியையும் மருத்துவமனையும் கட்டுவதற்கு கர்மவீரர் கல்விக்கண் திறந்த காமராஜர் முடிவெடுக்கிறார். திருநெல்வேலியில் அதற்கான பொருத்தமான இடத்தை தேடுகிறார்.
காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது மிக நெருங்கிய நண்பரான காதர் மீரா சாகிப் அவர்கள் தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார். அந்த நிலப்பகுதி இன்று திருநெல்வேலியில் ஹை கிரவுண்ட்எனஅழைக்கப்படுகிறது. அங்கு தான் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனையும் இன்று இயங்குகிறது. பல கோடி ரூபாய் மதிப்பான இடத்தை தானம் செய்த வள்ளல்தான் நமது காதர் மீரா சாகிப்.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற இஸ்லாமிய அறநெறியைப் பின்பற்றியவர் வள்ளல் மீரா சாகிப். தனது பெயரோ, புகழோ எங்கும் வெளிப்பட வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தானமாக அளித்தார்.
காதர் மீரா சாஹிப் அவர்கள் நிலம் கொடுத்ததால் உருவான இந்த மருத்துவமனை இன்று இந்தியாவின் மருத்துவ வரைபடத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இன்றைய சூழலில் ஒரு சென்ட் நிலத்தின் விலை விண்ணைத் தொடும் நிலையில், தனது 300 ஏக்கர் நிலத்தை பொதுச் சேவைக்காகத் தந்த அந்தப் பெருந்தன்மை வியப்பிற்குரியது. அந்த நிலத்தில் இன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் வரை பல பிரிவுகள் இயங்கி வருகின்றன.
மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த கர்மவீரரும், பிரதிபலன் பாராமல் நிலத்தைத் தந்த வள்ளல் காதர் மீரா சாஹிபும் இணைந்தே திருநெல்வேலியின் இந்த மருத்துவப் புரட்சியைச் சாத்தியமாக்கினர். இந்த வரலாற்றுச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அடையாளப்படுத்தப்படாத பல உண்மையான நாயகர்களை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல முடியும்.
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)