லடாக் பகுதியில் பெரும் வன்முறை.. போர்க்களமாக மாறிய லே.. 4 பேர் பலி.. பலர் காயம்
லடாக்: லே லடாக் பகுதியில் மாநில அந்தஸ்து கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் நான்கு பேர் இறந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 40 பேர் போலீஸ் அதிகாரிகள்.
லடாக்கை ஆறாவது அட்டவணையில் சேர்க்கவும், மாநில அந்தஸ்து வழங்கவும் கோரிக்கை விடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் லே பகுதியில் பதற்றம் நிலவியது. நேற்று பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையில் தீ வைப்பு, சொத்து சேதம், கல் எறிதல், BJP அலுவலகம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
போர்க்களம் போல அந்தப் பகுதி காணப்படுவதால் அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லே பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. இரண்டு உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையில் சேர்த்தல், லே மற்றும் கார்கிலுக்கு தனி லோக்சபா இடங்கள், வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு ஆகியவை போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள். சோனம் வாங்சுக் செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து வாங்சுக் தனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்.
லே பகுதியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர, மற்ற இடங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.