அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
சென்னை: கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சையின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் கோடை வெயில் துவங்கி,மே மாதங்களில் வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. இதற்கிடையே வானிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளுமையான இயற்கை பானங்களை நாடிச் செல்கின்றனர். குறிப்பாக தர்பூசணி, பழங்கள், மோர், சர்பத், லெமன் போன்ற ஜூஸ்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் வாங்கி பகிரக்கூடிய ஒரே ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் மட்டும் தான். ஏனெனில் இந்த எலுமிச்சை பழங்களை வீட்டிலேயே வாங்கி வைத்து தேவையான போது ஜூஸ் தயார் செய்து பருகலாம். இதற்கு குறைந்த செலவே ஆகும். அதே சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களும் எலுமிச்சை பழங்களைக் கொண்டு இன்ஸ்டன்ட் லெமன் ஜூஸ், லெமன் பவுடர், லெமன் சிரப் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக எலுமிச்சை பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் தற்போது நிலவும் வெயிலின் தாக்கத்தால், சந்தையில் விற்கப்படும் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மக்களின் தேவை அதிகரித்ததால் எலுமிச்சம் பழத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ எலுமிச்சையின் விலை ரூபாய் 30 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரு கிலோ எலுமிச்சை ரூபாய் 120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 150 விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சையின் அதிரடி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.