Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!

Su.tha Arivalagan
Apr 05, 2026,10:37 AM IST

- ச. ஸ்ரீபிரியா 


நான் எம்.ஏ. படிக்கும்போது அம்மா திடீர் உடல்நலக் குறைவால் இறந்தார். அதன் சோகத்தில், அப்பா ஏற்கனவே மூன்று அக்கா-தங்கைக்கு திருமணம் செய்துவைத்தவர்—அண்ணனும் நானும் மட்டும் இருக்க, “தான் இல்லாமல் போனால்?” என்ற பயத்தில் எனக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தார். கணவர் அன்பும் பண்பும் அறிவும் கொண்டவர்; இரண்டு ஆண்டில் மகன் பிறந்தான்.


குழந்தையை வளர்க்க அனுபவம் இல்லை. அம்மாவும் சகோதரியும் குழந்தைகளை வளர்ப்பதைப் பார்த்தது மட்டுமே. பையன் அழாமல் இருக்க, மணி பார்த்து திட உணவை மிக்சியில் அரைத்து திரவ உணவாகக் கொடுத்தேன்;  மாதாந்திர உணவுமுறை அட்டவணையை பின்பற்றி, அழ விடாமல் உணவை ஊட்டினேன். எடை வேகமாகக் கூடியது; “வளர்ந்தால்  குண்டாக வருவான்” என்ற மருத்துவர் எச்சரிக்கையில் பயந்து, ஒரு வயதிலேயே டயட்டை பின்பற்றினேன்.


இப்போது புரிகிறது: அழுது பசிக்க விட்டு உணவு கொடுப்பதே ஆரோக்கியம். தானாக மென்று சாப்பிடப் பழக்கினால் பலம் கூடும்; தாய் ஊட்டும் உணவு குழந்தைக்கு பிடிக்காமல் போகலாம். இது நான் செய்த தவறு. நீங்கள் செய்யாதீர்கள். குழந்தை பசித்து அழும் போது கொடுங்கள்; அவர்களே எடுத்து உண்ண விடுங்கள். அதுதான் நல்ல வளர்ப்பு.




நேரம் ஒதுக்கு, மொழி மலரும்


என் தோழி குழந்தைக்கு நேரத்துக்கு உணவு, தூக்கம், வீட்டு வேலை எல்லாம் முறையாகச் செய்தார்; ஆனால் பேச்சுக்கு நேரம் இல்லை. வேலைக்குச் செல்லும் பெண், குழந்தையை கணவர்-மாமியாரிடம் விட்டு வந்தார். ஒன்று, இரண்டு வயதாகியும் குழந்தை பேசவில்லை; பசி வந்தால் பானை, தண்ணீர் குடம் காட்டி, கைநீட்டிச் சமிக்ஞை செய்தது. பயந்து மருத்துவரிடம் சென்ற போது, “பேச வேண்டியது பெற்றோர்தான்; குழந்தைகளோடு சேர விடுங்கள், வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்” என்ற ஆலோசனை கிடைத்தது.


அடுத்த நாளே அருகில் இருந்த பள்ளியில் சேர்த்தார்; ஒரு வாரத்தில் “அம்மா, அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி” என ஒவ்வொரு வார்த்தையும் மலர்ந்தது. வார்த்தைகள் வீட்டிலிருந்து பிறக்கின்றன; நாம் பேசுவதைக் குழந்தை பேசும், நாம் சொல்லுவதைச் செய்யும். இன்று நேரமில்லை என்கிறோம், ஆனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையோடு பகிர்ந்தால் போதும்—பேசுங்கள், கதைகள் சொல்லுங்கள், சேர விடுங்கள். குழந்தை பருவம் பழக்கத்தின் வயது; இப்போது பேசக் கற்றுத் தருவதுதான், நாளைய மாமனிதரை வளர்க்கும் அடித்தளம். என் தோழியின் தவறை நினைவில் கொள்ளுங்கள்.நேரம் ஒதுக்குங்கள், மொழி தானே மலரும்.