ஒற்றுமையால் உயர்வோம்!

Su.tha Arivalagan
Mar 23, 2026,12:05 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி 


திசைகள் வேறானாலும் தேசம் ஒன்றே.!

மனிதர் வேறானாலும் குருதி ஒன்றே!


அணுகுண்டுகளில்  அமைதி தேடும் அறிவிலிகளே..!

ஆயுதம் ஏந்துவதால் அழிவுதான்  மிஞ்சும்!


ஈரானின் மண்ணிலும் ஈரம் உண்டு.!

அமெரிக்கக் காற்றிலும் அன்பு உண்டு.!


அரசியல் சதுரங்கத்தில் சிப்பாய்கள் நாமல்ல.!

அமைதிப் பூங்காவின் அழகான மலர்கள் நாம்!


வெடிகுண்டுச் சத்தத்தில் விடியல் வராது.!

மனிதனிடம் காட்டும் அன்பே விடியல்.!


பகைமைப் போர்வையைப்  தூக்கி எறி.!

பாகுபாடற்றப் பண்பால் உலகை ஆள்வோம்!


எல்லைகள் என்பது நிலத்திற்குத் தான்.!

மனிதனின் அன்பு இதயங்களுக்கு அல்ல.!




மதங்கள் கடந்து, மொழிகள் கடந்து,

ஒற்றுமையை பயிரிட்டு வாழ்வோம்.


என்றும் யுத்தமில்லா உலகம் அமைத்து,

ஒரே குடும்பமாய் சரித்திரம் படைப்போம்!

 

அமைதியே உலகை  என்றும் காக்கும்.!

ஒற்றுமையால் உலகில் உயர்ந்து நிற்போம்.!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)