Eradicate Tuberculosis.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. எக்ஸ்-ரே (X-ray) எடுத்துக்கொள்வது அவசியம்!

Su.tha Arivalagan
Mar 24, 2026,04:51 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


 காசநோய் ஒழிப்போம், ஆரோக்கியமான சமுதாயம் படைப்போம்" என்பதைப் போல் வாழ்ந்து காட்டுவோம்.


உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் காசநோய் (TB) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. காசநோய் ஒரு தொற்றுநோயாகும். இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கிறது. காசநோய் Mycobacterium tuberculosis என்ற கிருமியால் ஏற்படுகிறது.


1882 ஆம் ஆண்டு Robert Koch இந்த கிருமியை கண்டுபிடித்தார். அந்த நாளை  நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. 


காசநோய் (TB) என்பது நுரையீரலை முதன்மையாக பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று நோய் ஆகும்.


காசநோயின் வகைகள்:




செயலில் உள்ள காசநோய் (Active TB): அறிகுறிகள் வெளிப்படையாக இருக்கும், இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.


மறைந்திருக்கும் காசநோய் (Latent TB): கிருமி உடலில் இருக்கும், ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லாமல்  மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கிறது.


3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், ரத்தத்துடன் கூடிய சளி, நெஞ்சு வலி &  சுவாசத்தின் போது வலி ஏற்படுதல்.

 மாலை நேரத்தில் லேசான காய்ச்சல் மற்றும் நள்ளிரவில் குளிர் எடுத்து காணப்படுதல். இரவு தூங்கும்போது அதிகப்படியான வியர்வை ஏற்படுதல்.  காரணமில்லாமல் எடை குறைதல் மற்றும் பசி எடுக்காமல் இருத்தல். எப்போதும் உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் காணப்படுதல். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சளி பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்-ரே (X-ray) எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.


இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் காசநோயை முழுமையாக குணப்படுத்த முடிகிறது.


சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிறது. ஆனால் காசநோய் குணமாகக்கூடிய நோய் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

மருத்துவ சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த முடிகிறது  என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 


World Health Organization இந்த நோயை கட்டுப்படுத்த பல திட்டங்களை செயல்படுத்துகிறது.  DOTS (Directly Observed Treatment) போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் மிகவும் முக்கியம். சிகிச்சையை முறையாக தொடர வேண்டும். நோயாளிகள் மருந்துகளை நிறுத்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல உணவு மற்றும் சுத்தமான சூழல் அவசியம். சமூகத்தில் விழிப்புணர்வு மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


ஏழை மற்றும் பலவீனமான மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா TB நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகும். அரசு பல இலவச சிகிச்சை திட்டங்களை வழங்குகிறது.


காசநோய் தடுப்பூசி, பொதுவாக BCG (Bacillus Calmette-Guérin) தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. இது பிறந்த குழந்தைகளுக்கு காசநோயின் கடுமையான வடிவங்களை (குறிப்பாக மூளைக்காய்ச்சல்) தடுக்க வழங்கப்படும்  மிக முக்கியமான தடுப்பூசியாகும்.


இந்த தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காசநோய் கிருமி தொற்றுவதைத் தடுக்க உதவுகிறது. 


காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில், பிறந்த குழந்தைகளுக்கு உடனே அல்லது சில வாரங்களுக்குள் இந்த ஊசி போடப்படுகிறது.


இது முக்கியமாக குழந்தைகளில் ஏற்படும் காசநோயைத் தடுக்க 50-80% வரை பயனுள்ளதாக உள்ளது.


 ஊசி போட்ட இடத்தில் சிறிய வடு அல்லது புண் ஏற்படலாம், இது இயல்பானது ஆகும்.

 பெரியவர்களுக்கு இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாகவே காணப்படுகிறது. 


“TB இல்லாத உலகம் படைப்போம் " என்று அனைவரும் வாழ்ந்து காட்டுவோம் .


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)