46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
சென்னை: வேற லெவல் குக்கிங் ஒன்றை லோகேஷ் கனகராஜ் சத்தம் போடாமல் செய்ய ஆரமபித்துள்ளராம். அதாவது தமிழ்த் திரையுலகின் ஐகான்களாக வலம் வரும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை அடுத்த படத்தில் இணைக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் "கூலி" படத்திலிருந்து அடுத்த படத்திற்கு நகர்ந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லோகேஷ் தற்போது அதிரடியான திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளாராம். அதாவது தனது ஆதர்ச நாயகனான கமல்ஹாசனையும், ரஜினிகாந்த்தையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
இதுதொடர்பான கதை ஒன்றை அவர் ஏற்கனவே இருவரிடமும் கூறி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் மெகா மாஸாக இந்த படத்தை உருவாக்கும் திட்டத்தில் லோகேஷ் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிரது. இந்தப் படத்துக்காக கைதி 2 படத்தையும் கூட ஒத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
திரையுலகைப் பொறுத்தவரை கமல்ஹாசன்தான் சீனியர். இருவரும் இணைந்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதுதான் ரஜினிக்கு முதல் படம். ஆனால் கமல்ஹாசன் அந்த சமயத்திலேயே ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்து புதிய டிரண்டை உருவாக்கினர். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட படம் இது. அந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் நட்போடு பிரிந்தனர். மீண்டும் இணையவில்லை.
இந்த நிலையில் லோகேஷ் படத்துக்காக இருவரும் இணைந்தால் அது 46 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதை அதிரடியான கேங்ஸ்டர் கதையாம். கதைப்படி கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பழைய ரிட்டயர்ட் கேங்ஸ்டர்களாக வருகிறார்களாம். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பழைய நினைவுகளை அசை போடுகிறார்களாம்.. மீண்டும் ஒரு முறை ஆயுதங்களைக் கையில் எடுக்கும் சூழல் வருகிறதாம்.. அதன் பிறகு அவர்கள் செய்யும் அதகளம்தான் படத்தின் கதையாம்.
லோகேஷுக்கும் கேங்ஸ்டர் கதைக்கும் செம பொருத்தம். விக்ரம் படத்தில் மிரட்டியிருப்பார். இப்போது கமல், ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தால் அது வெறித்தனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்களும் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் இந்தப் புதிய படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று தெரிகிறது. அதேசமயம், சன் பிக்சர்ஸையும் உடன் இணைத்து மிகப் பெரிய அளவில் இந்தியா முழுவதும் மிகப் பிரமாண்டமான முறையில் இப்படத்தைக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. எல்லா செய்திகளுமே தகவல்களாகவே உள்ளன. உறுதிப்படுத்தப்பட்டால் இந்தப் படம் நிச்சயம் இந்திய அளவில் மிகப் பெரிய படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.