LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

Su.tha Arivalagan
Mar 10, 2026,05:22 PM IST

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் (Hostels and PGs) தங்கியுள்ள மாணவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, விடுதிகளில் வழங்கப்படும் உணவு முறையில் அதிரடி மாற்றங்களை விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


முக்கிய மாற்றங்கள் என்னென்ன?


விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சமீபத்திய முடிவின்படி, சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அதிக எரிவாயு செலவாகும் உணவுகளுக்கும் தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 


விடுதி உணவில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் இதோ:




- டீ, காபி கிடையாது: விடுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வழங்கப்பட்டு வந்த டீ, காபி முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

- டிபன் வகைகளுக்குத் தடை: சப்பாத்தி மற்றும் தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கு அதிக நேரம் மற்றும் எரிவாயு தேவைப்படுவதால், அவை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

- கலவை சாதம் (Variety Rice): சப்பாத்தி, தோசைக்கு மாற்றாக இனி அனைத்து வேலைகளிலும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும்.

- முட்டை மற்றும் அப்பளம்: வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- குருமா, சாம்பாருக்கு பதில் சட்னி மட்டுமே வழங்கப்படும்.


காரணம் என்ன?


தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு தான் இந்தத் திடீர் முடிவுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல் மற்றும் அதன் விலை உயர்வு ஆகியவற்றால், விடுதிகளைத் தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த அளவு எரிவாயுவைப் பயன்படுத்தி அதிகப்படியானோருக்கு உணவு சமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த "சிக்கன நடவடிக்கை" எடுக்கப்பட்டுள்ளதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.


பாதிக்கப்படும் தங்குவோர் :


சென்னையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் தங்கும் விடுதிகளையே நம்பியுள்ளனர். இந்தத் திடீர் உணவு மாற்ற அறிவிப்பு அவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நீண்ட வேலை நேரத்திற்குப் பிறகு டீ, காபி மற்றும் முறையான டிபன் வகைகள் கிடைக்காதது தங்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரானவுடன் மீண்டும் பழையபடி அனைத்து உணவு வகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதுவரை விடுதியில் தங்கியிருப்பவர்கள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என விடுதி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.