லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

Su.tha Arivalagan
Feb 04, 2026,01:23 PM IST
திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி, திரிபோலியில் நடந்த திடீர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியுள்ளது.

லிபியாவின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர் முவம்மர் கடாபி. அவரது மகனான 53 வயதான சைப் அல் இஸ்லாம் கடாபி, ஒரு காலத்தில் லிபியாவின் அதிகார மையமாக வலம் வந்தவர். அவரது படுகொலைச் சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



சைப் அல் இஸ்லாம் லிபியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ஜின்தான் என்ற ஊரில் தன் வீட்டின் தோட்டத்தில் இருந்தபோது திடீரென அங்கு ஆயுதம் தாங்கி நான்கு பேர் ஊடுறுவி உள்ளே புகுந்தனர். பின்னர் அல் இஸ்லாமை நோக்கி சரமாரியாக அவர்கள் சுட்டனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அல் இஸ்லாம் சற்று நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

வீட்டுக்குள் ஊடுறுவதற்கு முன்பு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்புக் கேமராக்களை அந்தக் குழு செயலிழக்க வைத்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று அவரது குடும்பத்தினர் வர்ணித்துள்ளனர்.

2011ம் ஆண்டு லிபியாவில் நேட்டோ படைகள் புகுந்து தாக்குதல் நடத்தின. அப்போது ஏற்பட்ட மக்கள் கலவரம் மற்றும் தாக்குதலில் கடாபி பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதன் பின்னர் லிபியாவை விட்டுத் தப்பி ஓட முயன்றார் அல் இஸ்லாம். ஆனால் அவர் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஜின்தானில்தான் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது தந்தை கடாபி அதிபராக இருந்தபோது மிகப் பெரிய சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல் இஸ்லாம். சொந்தமாக புலிகளை தனது பிரமாண்ட வீட்டில் வளர்த்து வந்தார். சொகுசு கார்களில்தான் பயணிப்பார். அடிக்கடி லண்டன் போய் ஜாலியாக இருப்பார். இப்படி சொகுசாக வாழ்ந்து வந்தவர், தந்தையின் படுகொலைக்குப் பிறகு தப்பி ஓடி பிடிபட்டபோது மிகவும் மோசமான சூழலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். பல வருட காலம் இந்த சிறைவாசம் நீடித்தது. மனித உரிமை அமைப்புகளின் தலையீட்டுக்குப் பிறகே அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.