திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
சென்னை: பழம்பெரும் பாடலாசிரியர், வசனகர்த்தா, பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90 ஆகும்.
சிவகங்கை மாவட்டம் கீழப் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவை செங்குட்டுவன். சிறந்த திரைப்படப் பாடலாசிரியர். குறிப்பாக பக்திப் பாடல்களுக்குப் பெயர் போனவர். குறிப்பாக சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பல பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன்தான். அத்தனைப் பாடல்களும் தேன் சொட்டு.. அத்தனையும் சூப்பர் ஹிட்டும் கூட.
ராஜராஜசோழன் படத்தில் இடம் பெற்ற ஏடு தந்தானடி தில்லையிலே, அகத்தியர் படத்தில் இடம் பெற்ற தாயிற் சிறந்த கோயிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பாடல், கந்தன் கருணை படத்தில் இடம் பெற்ற திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா உள்ளிட்ட பாடல்களை சொல்லலாம்.
இதுதவிர திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை உள்ளிட்ட பாடல்களையும் எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன். இலக்கிய நயத்துடன் கூடிய பாடல்களைப் படைப்பதில் திறமையானவர் பூவை செங்குட்டுவன். 4000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், 3 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 2 படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். இதுதவிர மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் என பெரும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். தனக்கென தனி பாணியில் பாடல்கள் புனைவதில் தனித்துவம் மிக்கவராக விளங்கியவர் பூவை செங்குட்டுவன். சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களில் தமிழே இல்லாமல் பாடல்கள் வருவது குறித்து வருத்தமும் வெளியிட்டவர் பூவை செங்குட்டுவன். அவரது உடல் சென்னையில் கலைத் துறையினர், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.