"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
சென்னை: மடப்புரம் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், அவரது தாயார் மாலதி எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மகனின் மரணத்திற்குப் பின்னால் அதிகாரமிக்க ஒரு "பெரிய இடம்" இருப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் மீது நிகிதா என்பது நகை திருட்டு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரைணயின் போது மரணமடைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி.,யிடம் இருந்து சிபிஐ.,க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது அஜித்குமாரின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் புகார் முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒரு "பொய் புகார்" என அவரது தாயார் மாலதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என் மகன் நகையைத் திருடியதாக நிகிதா ஏன் பொய் புகார் கொடுத்தார்? யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த புகார் அளிக்கப்பட்டது?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், பொய் புகார் அளித்த நிகிதாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாக மாலதி குறிப்பிடுவது போலீசாரின் வாக்குமூலத்தைத்தான். இது குறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஐந்து போலீசார் தன்னிடம் பேசும் போது, "பெரிய இடத்து உத்தரவு வந்ததால் தான் நாங்கள் இப்படிச் செய்தோம்" என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.இதனால் கோபமடைந்த தாயார், "யார் அந்தப் பெரிய இடம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சாதாரண இளைஞனின் மரணத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய அதிகார மையங்கள் செயல்படுவது ஏன் என்பது இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராடி வருகின்றனர். ஒரு பொய்யான புகாரால் ஒரு இளைஞனின் உயிர் பறிபோயிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போலீசாருக்கு அழுத்தம் கொடுத்த அந்த "பெரிய இடம்" யார் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.