அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி

Su.tha Arivalagan
Oct 11, 2025,05:13 PM IST

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் தொடர்ந்து சூடாக இருந்து வரும் நிலையில் அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் துபாயில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த விவகாரத்துக்குப் பின்னர் முதல் முறையாக அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.


மெஹந்தி சர்க்கஸ் என்ற தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, இயக்குனர் ஃபெடரிக் என்பவரின் முன்னாள் மனைவியான ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் ஜாய் க்ரிசில்டாவை ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரது முதல் மனைவி ஸ்ருதியிடம் விவாகரத்து பெற்றதாக எந்த தகவலும் இல்லாததால் இந்த திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்தது. 




திருமண அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, ஜாய் க்ரிசில்டா கர்ப்பமாக இருப்பதாகவும், பின்னர் ரங்கராஜ் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். தற்போது, ரங்கராஜ் மற்றும் ஜாய் க்ரிசில்டாவின் சட்டப் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.


ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் பயணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், அவர் பாலைவனத்தின் பின்னணியில் ஒரு காரின் மீது கை வைத்து நின்று கொண்டிருக்கிறார். வெள்ளை சட்டை மற்றும் இளஞ்சிவப்பு பேண்ட் அணிந்து, சன்கிளாஸ் அணிந்திருந்த ஸ்ருதி, புதிய இடத்தின் சூழலை ரசிப்பது போல் காணப்பட்டார். அவர் அந்தப் புகைப்படத்திற்கு, "Habibi, Together us against the world!!!" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.


ஜாய் க்ரிசில்டா விவகாரம் வெளியான நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ரங்கராஜும் அவரது முதல் மனைவி ஸ்ருதியும் கோவையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருவரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சிகள் அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தின. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அவர்களின் புகைப்படங்கள் வைரலாகின. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல், வெவ்வேறு திசைகளில் முகத்தை திருப்பியிருந்தனர்.


சமீபத்தில், ஜாய் க்ரிசில்டா ஏசியானெட் உடனான ஒரு நேர்காணலில், ரங்கராஜின் திருமணத்தைப் பற்றி ஸ்ருதிக்கு தெரியும் என்று வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், "ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்கு எல்லாம் தெரியும். இந்த திருமணம் அவருக்கு தெரியாமல் நடந்தது என்று யாரும் நினைக்க வேண்டாம். ரங்கராஜ் என்னிடம் வந்து உறுதியாக சொன்னார், 'நான் எல்லாம் சொல்லிவிட்டேன். அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.'" என்று தெரிவித்தார் என்று கூறியிருந்தார்.