புலி பட விவகாரம் : முதல்வர் விஜய்க்கு எதிரான மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: தமிழக அரசியல் மற்றும் திரைத்துலையின் முன்னணி ஆளுமையான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகரும், முதல்வருமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'புலி' திரைப்படத்தின் போது, வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின் அடிப்படையில், நடிகர் விஜய் தனக்குக் கிடைத்த வருமானத்தில் சுமார் ரூ. 1.5 கோடியை மறைத்ததாகக் கூறி, அவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், வருமான வரித்துறை விசாரணையின் அடிப்படையில் உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தனது புகாரை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
வருமான வரித்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்ட இந்த விவகாரம், மனுதாரரே வழக்கை வாபஸ் பெற்றதால் தள்ளுபடியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பரபரப்பு
நடிகர் விஜய் தற்போது முழுநேர அரசியலில் களம் இறங்கி, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி, தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று சில வாரங்களே ஆகும் நிலையில், அவர் மீதான இந்த பழைய விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.