லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Meenakshi
Oct 15, 2025,05:24 PM IST
சென்னை: லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக்கோரி  லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.



ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் சென்னை உய்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நிதிபதி வழக்கை நவம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.