ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: அரசியல் கட்சிகளுக்கான ரோடு ஷோ, கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு, அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்பின்னர் தமிழக அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால், அரசியல் கட்சிகள் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.