சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

Meenakshi
Mar 18, 2026,03:51 PM IST

மதுரை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு நிலங்கள், நீர்நிலைகள், காப்புக்காடுகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றத் தமிழக அரசு விரிவான திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். இந்த மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாகக் குழுக்களை அமைக்க வேண்டும். அகற்றப்பட்ட இடங்களை மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராதவாறு பராமரிக்க வேண்டும்.




சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், நிலத்தடி நீர் மட்டத்தைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும். சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற நாட்டு மரக் கன்றுகளை நட்டு வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


சீமை கருவேல மரங்களை அகற்ற வட மாவட்டங்களுக்கு ஒய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பு அலுவலராக செயல்படுவர்  என்றும், எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.