திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Meenakshi
Jun 24, 2025,04:50 PM IST

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்நத வியனரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கூறி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.




இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் முன்னிலையில்  விசாரணைக்கு வந்த போது யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும் எனக் கூறப்பட்டது.


இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.