மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

Su.tha Arivalagan
Jul 11, 2026,04:53 PM IST

மதுரை : தென்னகத்து ஆன்மீகப் பெருமையின் அடையாளமாகவும், சக்தி பீடங்களில் முதன்மையானதாகவும் திகழும் மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. அம்பாளுக்கு மட்டுமேயுரிய பிரத்தியேகமான இந்த ஆன்மீகப் பெருவிழா, வருகிற 2026 ஜூலை 15 முதல் ஜூலை 25 வரை மிக விமரிசையாக நடைபெற உள்ளது.


விவசாயம் செழிக்கவும், உலக உயிர்கள் அனைத்தும் பசியின்றி வாழவும் அன்னை மீனாட்சியே நேரில் வந்து முளைப்பாரியிட்டு ஆசி வழங்கும் உன்னதமான திருவிழா இதுவாகும். இத்திருவிழாவின் போது தினமும் காலையும் மாலையும் அம்பாள் நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடாகி, நாதஸ்வர இன்னிசையுடன் வீதி உலா நடைபெற உள்ளது. வீதி உலா முடிந்த பிறகு தினசரி கண்கொள்ளாக் காட்சியான ஒய்யாளி சேவை நடைபெறும். ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் எந்த நாளில் என்ன உற்சவம் நடைபெற உள்ளது  என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.


திருவிழா நிகழ்ச்சி நிரல் விபரம்:


15.07.2026 (புதன்கிழமை) - வாஸ்து சாந்தி

திருவிழா தடையின்றி நல்ல முறையில் நடைபெற அருள்வேண்டி, மாலை வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா தொடங்குகிறது.


16.07.2026 (வியாழக்கிழமை) - முதல் நாள் (கொடியேற்றம்)

காலை: அம்பாள் சன்னதியில் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மங்களகரமான கொடியேற்றம்.

இரவு 7.00 மணி: அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா.


17.07.2026 (வெள்ளிக்கிழமை) - இரண்டாம் நாள்




காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா.


18.07.2026 (சனிக்கிழமை) - மூன்றாம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் காமதேனு வாகனத்தில் வீதி உலா.


19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) - நான்காம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் யானை வாகனத்தில் வீதி உலா.


20.07.2026 (திங்கட்கிழமை) - ஐந்தாம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.


21.07.2026 (செவ்வாய்க்கிழமை) - ஆறாம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் புறப்பாடு (வடிக்கு ஆடி வீதி திருவள்ளுவர் கழகம் மண்டபத்தில் எழுந்தருளல்).

இரவு 7.00 மணி: அம்பாள் கிளி வாகனத்தில் வீதி உலா (வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய தரிசனம்).


22.07.2026 (புதன்கிழமை) - ஏழாம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளல்.

இரவு 8.30 மணிக்கு மேல்: உற்சவர் சன்னதியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் வைபவம் உற்சவம்.


23.07.2026 (வியாழக்கிழமை) - எட்டாம் நாள்

காலை 9.00 மணி: தங்க சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு.

இரவு 7.00 மணி: அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா.


24.07.2026 (வெள்ளிக்கிழமை) - ஒன்பதாம் நாள் (சட்ட தேர்)

காலை: காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் சட்ட தேர் வீதி உலா.

இரவு 7.00 மணி: அம்பாள் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி அளித்தல் (வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே).

இரவு 8.00 மணிக்கு மேல்: புஷ்ப விமானத்தில் அம்பாள் வீதி உலா.


25.07.2026 (சனிக்கிழமை) - பத்தாம் நாள் (நிறைவு விழா)

காலை: திருவிழாவின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம்.

இரவு 7.00 மணி: அம்பாள் கனக தண்டியல் வாகனத்தில், உலகமே போற்றும் சயன திருக்கோலத்தில் எழுந்தருளல் (வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே).


ஆடி மாதத்தில் அன்னை மீனாட்சிக்கு நடத்தப்படும் இந்த ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் கலந்து கொண்டு, அன்னை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறையும் வராது. குறிப்பாக, உணவுக்கு தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படாது என்பது நம்பிக்கை. அதே போல் அம்பாளிடும் முளைப்பாரி போல் நம்முடைய வாழ்க்கையையும் அன்னை மீனாட்சி செழிக்க வைப்பாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.