மதுரையில் கோலாகலமாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே 08 ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் மாசி வீதிகளில் கூடி இருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் சித்திரை திருவிழா விடுமுறை நாட்களில் வந்ததால், நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர். கொடியேற்ற நாளிலும், திருக்கல்யாணத்திற்கு முந்தைய நாளிலும் மதுரையில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. பக்தர்கள், "எல்லாம் மீனாட்சி அம்மனின் கருணை" என்று சந்தோஷமாக கூறினர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். இது மே 08-ம் தேதி கோலாகலமாக நடந்தது. ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொரு நாளும் நடத்திக் காட்டப்பட்டன.
மே 06-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. மே 07-ம் தேதி திக்விஜய வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி, பவளகனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
சரியாக காலை 08.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்கள். அப்போது திருக்கல்யாணத்தை காண வந்திருந்த நிறைய பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர்.
மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை பார்த்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணத்தன்று தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டால், தன்னை போல் மற்ற பெண்களுக்கும் அன்னை மீனாட்சி தீர்க்க சுமங்கலி வரத்தை அருள்வாள் என்பது நம்பிக்கை.
பக்தர்களின் சந்தோஷ ஆரவாரத்திற்கு இடையே திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன் பிறகு சுவாமியும், அம்பாளும் திருமணக் கோலத்தில் கோவிலை சுற்றி வந்தனர். மாலையில் பூப்பல்லக்கு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வருவார்கள். மே 09-ம் தேதி காலையில் மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மதுரையின் பல பகுதிகளிலும் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண நிறைய பேர் மாசி வீதிகளில் கூடி இருந்தனர்.