கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

Swarnalakshmi
Oct 22, 2025,11:04 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


மகா கந்த சஷ்டி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. விசுவா வசு வருடம் 20 25 அக்டோபர் மாதம் 22ஆம் நாள் புதன்கிழமை ஆறு நாட்கள் கடைபிடிக்கும் மகா கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.


" எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடிவிடும்" என்பது ஆன்றோர் வாக்கு.


தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களும், விரதங்களும், பண்டிகைகளும் ஏராளம். அவற்றுள் முருக பக்தர்கள் அனைவரும் மிகவும் கடுமையாக கடைபிடிக்கும் விரதம்  ஐப்பசி மாதம் வளர்பிறையில் தொடங்கும் கந்த சஷ்டி விரதம் ஆகும். அக்டோபர் 22ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படுகிறது.


அக்டோபர்  27  


சூரசம்ஹாரம் :




கந்த சஷ்டி விரதம் இருந்த பின்னர்  சூரசம்ஹாரம் நடத்தப்படும் நாள் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளிலும், உலகெங்கிலும் உள்ள முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விரதத்திற்கான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது.அதற்கென சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இன்றிலிருந்து நடைபெறுகிறது.


முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்தது ஐப்பசி மாத சஷ்டி திதியில் என புராணங்கள் கூறுகின்றன.இந்த நாளை கொண்டாடும் விதமாக ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும். சூரனுடன்  போர் செய்து அவனை  முருகப்பெருமான் வெற்றி கொண்ட திருச்செந்தூர் திருத்தலத்தில் நடைபெறும் சூரசம்ஹார விழா உலக பிரசித்தி பெற்றதாகும். அக்டோபர் 28ஆம் தேதி முருகப்பெருமான், தெய்வானை திருமண வைபவம் நடைபெற உள்ளது. 48 நாட்கள்,21 நாட்கள்,11 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் இந்த ஆறு நாட்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள்.


மகா கந்த சஷ்டி விழாவின் போது லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மாலை அணிந்தும்,காப்பு கட்டியும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். கடுமையான விரதம் மேற்கொள்வார்கள். அதிலும் மிளகு விரதம், துளசி விரதம், இளநீர் விரதம் என பல வகைகளில் கந்த சஷ்டி விரதம் பக்தர்கள் மேற்கொள்வது வழக்கம்.


பக்தர்கள் அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. கந்த சஷ்டி விரதம் குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பர். கந்த சஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம். முனிவர்களும், தேவர்களும் கடைப்பிடித்த விரதம் என்னும் பெருமை இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு உண்டு. விரதம் மேற்கொள்பவர்கள் எளிமையான சைவ உணவுகள்,பால்,பழங்கள் பச்சரிசி சாதம், தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்வது சிறப்பு.


காலையிலும் மாலையிலும் இருவேளை பூஜை அறையில் விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.  மயில்வாகனன் நினைத்தபடியே கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, வேல்மாறல்,குமாரஸ்தவம் போன்ற முருகனுக்கு உரிய மந்திரங்களை படிப்பதும் கேட்பதும் சிறப்பாகும்.


"ஓம் சரவணபவ" ஆறு எழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது மிகவும் சிறப்பு.  அக்டோபர் 22ஆம் தேதி துவங்கும் மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் அல்லது விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் அனைவருக்கும் முருகப் பெருமான் அருள் கிடைக்க பெறுவோமாக.


வேலவன் அருளால் மணப் பேறு, மகப்பேறு, ஆயுள், நிறை செல்வம், ஆரோக்கியம், புகழ், நல்வாழ்வு,  நிம்மதி, சந்தோஷம் கிடைக்க பெறுவோமாக.நம் பிறவிப்பினை நீங்கி முருகன் அருள் எப்போதும் துணை நிற்கும்.


" வேலும்  மயிலும் சேவலும் துணை "

கந்தனுக்கு அரோகரா... கடம்பனுக்கு அரோகரா...


மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.